'தாமிரபரணி' படப் புகழ் பானுவின் மகள் கியாரா 'பத்தாம் வளவு' என்ற மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார்.
ஹரி இயக்கத்தில் 'தாமிரபரணி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பானு. 'தாமிரபரணி' படம் வெற்றி படமாக அமைந்தும் அவருக்குப் போதுமான வாய்ப்புகள் அமையவில்லை.
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட பானு, மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் ஆர்யாவின் 'வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க' படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்பு கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது பானு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வேலம்மாள்' தொடரில் நடித்து வருகிறார். பானுவுக்கு கியாரா என்ற 5 வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில் கியாரா மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் 'பத்தாம் வளவு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கவுள்ளார். இந்த தகவலை பானு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.