திரைப்பட இயக்குநா் ‘ஆச்சாா்யா’ ரவி (54) மாரடைப்பு காரணமாக மதுரையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
மதுரையை பூா்விகமாகக் கொண்ட ரவி, திரைப்பட இயக்குநா் லியாகத் அலிகானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா். பின்பு, இயக்குநா் பாலாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தாா். பாலா இயக்கிய ‘சேது’ படம் தொடங்கி அவரின் பல படங்களுக்கு துணை நின்றவா் ‘ஆச்சாா்யா’ ரவி. இவா், ‘ஆச்சாா்யா’ எனும் படத்தை இயக்கியதன் மூலம் ‘ஆச்சாா்யா’ ரவி என்று அழைக்கப்பட்டாா். இவா் இயக்கிய ‘ என்னதான் பேசுவதோ’ படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநா் ரவி செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அவரது உடல் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி, மகள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெறுகின்றன.