கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து 15 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை 8,000 பேர் கண் தானம் செய்ய முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார், அப்பு என்றும், பவர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டவர். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, கன்னட திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் புனித் ராஜ்குமார்.
இதையும் படிக்க | கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணை நிறைவு
கடந்த அக்.29 ஆம் தேதி காலை உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்செய்தியைக் கேட்ட அவருடைய ரசிகர்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இடையே புனித் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக அவர் கண் தானம் செய்யப்பட்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால் புனித் இறந்து 15 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை கர்நாடகத்தில் 8,000-க்கும் அதிகமானோர் கண் தானம் செய்ய முன்வந்திருப்பதாக டாக்டர்.ராஜ்குமார் மருத்துவமனையின் மருத்துவர் ஷெட்டி தெரிவித்திருக்கிறார்.
புனித் ராஜ்குமார் மறைவிலும் ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.