எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு இயக்குநர் சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.
நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சி தற்போது தென்காசியில் படமாக்கப்பட்டி வருகிறது.
பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சூர்யாவின் 39வது படமாக இது உருவாகவுள்ளது.
இதனையடுத்து சிவா படத்துக்குப் பிறகே சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதனையடுத்து அவர் வாடிவாசல் படத்தின் முன்கட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபவார் என்று கூறப்படுகிறது. வாடிவாசல் 1960களின் பின்னணியில் உருவாகும் படம் என்பதால் அதற்கான பணிகள் தாமதமாகலாம். அதற்கு முன் சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து முடித்து விடுவார்.