தெலுங்கு மொழி மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா இன்று (டிச.23) காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87.
அவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு மொழியில் என்டிஆர் காலத்திலிருந்து 750க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர் கைகாலா சத்தியநாராயணா. திரைப்படங்களில் சிறிய சிறிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய சத்தியநாராயணா, படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார்.
பின்னர் திரைப்படங்களில் நாயனகாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்துள்ளார். இவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார்.
கைகாலா சத்தியநாராயணாவின் மறைவுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள நடிகர் கல்யாண்ராம், கைகாலா சத்தியநாராயணாவின் மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. தெலுங்கு திரையுலகில் அழிக்க முடியாத பல கதாபாத்திரங்களில் நடித்த திறமைக்குரியவர். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.