ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' படத்தில், இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலால் தணிக்கைக் குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீபிகா படுகோன் காவி நிற உடையை அணிந்து நடனமாடும் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சர்ச்சையான காட்சிகளை நீக்குவதற்காக தணிக்கைக் குழு மீண்டும் படத்தை தணிக்கை செய்யவுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ளது பதான் திரைப்படம். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ''பேஷாரம் ராங்..'' பாடலில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த நடனக் காட்சிகள் இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்களில் பதான் படத்தை திரையிட எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில், படத்தை தணிக்கைக் குழு மீண்டும் தணிக்கை செய்யவுள்ளது. படைப்புகள் பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து 'பதான்' படத்தை மீண்டும் தணிக்கை செய்வதற்கு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.