தமிழ் திரைப்பட இசையில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ரஹ்மான். அதுவரை தமிழக அளவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அளவில் அப்படி ஒரு ஒலியைக் கேட்டதில்லை என்ற அளவுக்கு அவரது இசையின் தாக்கம் இருந்தது. இசைத்துறையில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினார்.
தனது தனித்துவமான இசையால் முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இசை மூலம் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
பெரிதினும் பெரிது கேள் என்பதற்கு ஏற்ப, ஒரு பாடலை மெருகேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துவிடுவது அவரது வழக்கம். ஒரு கட்டத்துக்கு மேல், தமிழில் பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என தேர்ந்தெடுத்து ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக தமிழ் ரசிகர்களுக்கு வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே கிடைத்தது. சில வருடங்களுக்கு அதுவும் இல்லை.
ஆனால் சமீப காலமாக தமிழில் அதிக படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் உச்சமாக இந்த வருடம் அவர் ஒரு இசை விருந்தே படைக்கவிருக்கிறார்.
அவரது இசையில் இந்த வருடம் தமிழில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியின் 'வெந்து தணிந்தது காடு', விக்ரமின் 'கோப்ரா', சிவகார்த்திகேயனின் 'அயலான்', சிம்புவின் 'பத்து தல' உள்ளிட்ட படங்கள் அவரது இசையில் இந்த வரும் வெளியாகவிருக்கின்றன. நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் 'மலையன்குஞ்சு' படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.