இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை பாஜக தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க, அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குநர் ஷங்கருடன் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா மாநிலம் சரூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த அகுலா ஸ்ரீவாணி என்பவர் தனது கட்சியினருடன் வந்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.
பின்னர் பள்ளியில் படப்பிடிப்பு நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று தெரிவித்த அவர், படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்ததற்காக அம்மாநில கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி என்பவரை விமர்சித்தார். இதனையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.