'பேச்சுலர்', 'ஜோம்பி', 'நோட்டா', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' போன்ற பல படங்களில் பாடல் பாடியுள்ளவர் ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணா. இவர் நடிகையும் கூட.
தற்போது ஸ்வாகதா தனது சகோதரி மாயா கிருஷ்ணனுடன் இணைந்து 'இன்ட்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லியோ விஜயன் இயக்கியுள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்வாகதாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் அக்ஷய் குமார் என்பவருக்கும் கடந்த மார்ச் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணமானது ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் நடைபெற்றது.
தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்வாகதா கிருஷ்ணன், ''நானும் எனது வாழ்க்கைத் துணை அக்ஷய்யும் உங்கள் ஆசிர்வாதங்களுடன் அன்பு மற்றும் மரியாதையுடன் இந்தப் பயணத்தை துவங்குகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.