சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கைகோர்க்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தினை மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது என சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடிகை குஷ்பு சந்தித்து பேசியுள்ளளார். ரஜினியை சந்தித்தது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு கோப்பை தேநீர் மற்றும் சிரிப்புடன் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடனான இந்த சாதாரண சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது. உங்களது மதிப்புமிக்க நேரத்தை அளித்ததுக்கு நன்றி சார். உங்களுடன் இருப்பது எப்போதுமே மகிழ்வானது. நீங்கள் அருமையாக இருக்கிறீர்கள். இதை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்” என கூறியுள்ளார்.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் அடுத்த இரண்டு படங்களை ரஜினி நடிக்க இருப்பதால் இதில் ஏதேனும் ஒரு படத்தில் குஷ்புவுடன் இணைந்து நடிப்பதாக இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அன்றும் இன்றும் என ரசிகர்கள் ரஜினி- குஷ்புவின் பழைய படங்களுடன் இந்த புதிய படத்தினையும் பகிர்ந்து வருகின்றனர்.