மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் மும்பையிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி 8-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார்.
இதையும் படிக்க | லதா மங்கேஷ்கர் மறைவு: ஏ.ஆர். ரஹ்மான், திரைத் துறையினர் இரங்கல்
காலை 8 மணியளவில் உயிர் பிரிந்த நிலையில், அவரது உடல் தற்போது மருத்துவமனையிலிருந்து மும்பையிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு பிற்பகல் 3.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் சிவாஜி பூங்காவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. சிவாஜி பூங்காவில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் ஆதித்ய தாக்கரே சிவாஜி பூங்காவில் நேரில் சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி இரு தினங்களுக்கு (பிப்ரவரி 6, பிப்ரவரி 7) துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.