பாகுபலி, கேஜிஎஃப் ஆகிய படங்கள் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வட இந்தியாவில் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, புஷ்பா தி ரூல், ராதே ஷியாம் படங்கள் ஹிந்தி திரையுலகில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழ் நடிகர்களும் ஹிந்தி ரசிகர்களைக் கவரும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், தென்னிந்திய கதைகள் மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்கு முக்கிய காரணம்
1, அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் பிணைந்துள்ளனர்.
2.அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகள் மீது அன்பு செலுத்தும் முறை என்பது தனித்துவமானது. மேற்கத்திய முறையில் அவர்கள் நடந்துகொள்வதில்லை.
3. தொழிலில் அவர்கள் காட்டும் மதிப்பும் ஆர்வமும் இணையற்றது.
அவர்களை ஹிந்தி திரையுலகினர் கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ஹிந்தி திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.