சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் அறிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரையரங்குகளில் பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து, ஒமைக்ரான் வகை கரோனா வருகை காரணமாக திரையரங்குகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஜனவரியில் வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், வலிமை உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டன. எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு குறித்தும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இதையும் படிக்க | ’டான்’ திரைப்படத்துடன் மோதும் ‘ஆர்ஆர்ஆர்’
தற்போது கரோனா சூழல் குறையத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாவதற்குத் தயாராக இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுத் தேதியை அறிவித்து வருகின்றன. டான், ஆர்ஆர்ஆர் படங்கள் மார்ச் 25-ம் தேதி வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் பாண்டிராஜ் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.