காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள வராஹரூபம் பாடலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் வணங்கும் பஞ்சுருளி என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கன்னட திரைப்படமான காந்தாரா பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு படம் வசூலில் சாதனை படைத்தது. 16 கோடி செலவில் உருவான காந்தாரா உலகம் முழுவதும் 400 கோடி வசூலை அள்ளியது.
இதையும் படிக்க: 'வானதி'யுடன் நாக சைதன்யா காதல்?
காந்தாரா படத்தினைப் பார்த்த பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காந்தாரா படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
இந்தப் படத்தின் கிளைமாக்சில் இடம் பெற்ற வராஹரூபம் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தங்களது நவரசம் பாடலைக் காப்பியடித்து இந்த வராஹரூபம் பாடலை காந்தாரா படத்தில் வைத்துள்ளதாக கேரளத்தைச் சேர்ந்த பிரபல இசைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வராஹரூபம் பாடலுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதனால், ஓடிடியில் வராஹரூபம் பாடல் இடம்பெறாமலே காந்தாரா படம் வெளியானது.
இதையும் படிக்க: ஆயுர்வேத சிகிச்சையில் நடிகை சமந்தா?
இந்த நிலையில், தற்போது வராஹரூபம் பாடலுக்கான தடையை நீக்கி பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஓடிடியில் வராஹரூபம் பாடல் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.