முகநூல் பதிவு எதிரொலி: மூத்த நடிகரின் சம்பள பாக்கியை அளித்த பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கியை மூத்த நடிகருக்கு அளித்துள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம். 
முகநூல் பதிவு எதிரொலி:  மூத்த நடிகரின் சம்பள பாக்கியை அளித்த பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் குடந்தை ஜோதிடர் வேடத்தில் நடித்தார் காத்தாடி ராமமூர்த்தி.நீளம் கருதி அவரது காட்சிகள் நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சம்பள பணத்தை லைகா நிறுவனம் அளித்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். 

“நீளம் கருதி நீக்கப்பட்ட காட்சிகளில் அவருடையவையும் சிக்கின.அதை வருத்தத்துடன் பகிர்ந்ததுடன் தன் உழைப்புக்கான ஊதியமும் கிடைக்கவில்லை என்பதையும் தெரிவித்தார். அதை ஒரு பதிவாக்கினேன்.நேற்று காத்தாடி சாரை உரத்த சிந்தனையின் விழாவில் சந்தித்தபோது முக மலர்ச்சியுடன் தொகை வந்தது என்று நன்றி சொன்னார்.கவனத்திற்கு வந்ததும் நடவடிக்கை எடுத்த லைகா நிறுவனத்திற்கு நன்றி” என பட்டுக்கோட்டை பிரபாகர் கூறியுள்ளார். 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com