சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சமந்தாவும் கலந்துக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்ச்சியுடன் வரவேற்றனர்.
இவ்விழாவில் இயக்குநர் குணசேகரன் பேசும்போது, இப்படத்தின் உண்மையான ஹீரோ சமந்தாதான் என்று பாராட்டினார். அவரது பேச்சைக்கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேலும், இயக்குநர் குணசேகரன் சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், ஆனால் தயாரிப்பாளர் நீலிமா சமந்தாதான் நடிக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்தார்.
பின்னர் சமந்தா பேசும்போது, எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை என்று கூறினார்.
சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றுள்ளார்.
மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா - துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாப்பாத்திரத்தை அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார்.
இதையும் படிக்க: திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு!
இந்த திரைப்படம் பிப்ரவரி 17ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 3டியிலும் இந்தப் படத்தை திரையரங்குகளில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.