சீரியலிலிருந்து விலகும் மகாநதி நாயகி! பார்த்திபாவுக்கு பதிலாக நடிகை திவ்யா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை பார்த்திபா அத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக நடிகை திவ்யா கணேஷ் நடிக்கவுள்ளார். நடிகை திவ்யாவின் முகம் நடிகை பாத்திபாவின் முகத்தைப்போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை பார்த்திபா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லஷ்மி பிரியா, அனந்தராமன், ருத்ரன் பிரதீவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
மகாநதி தொடரில் கங்கா பாத்திரத்தில் நடித்துவரும் பார்த்திபாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தற்போது மகாநதி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், அவரின் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபா, கங்கா பாத்திரம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. கங்காவாக வாழ்ந்ததற்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். எல்லா நாளும் என்மீது அன்பு செலுத்தியதற்கு மிகவும் நன்றி. இந்த பயணத்தில் மிகவும் மதிப்பு மிக்க பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். தனிப்பட்ட முறையில் நான் முதிர்ந்தவளாக உணர்கிறேன். அதற்காக நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை பார்த்திபா தற்போது கேரள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.