திரையரங்கில் குழந்தையைப் போல அழுதேன்: ஐஸ்வர்யா லட்சுமியின் நெகிழ்ச்சிப் பதிவு!

பிரபல நடிகை ஐஸ்வர்யா  லட்சுமி , மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’ படம் பார்த்து குழந்தையை போல அழுதேன் எனக் கூறியுள்ளார். 
திரையரங்கில் குழந்தையைப் போல அழுதேன்: ஐஸ்வர்யா  லட்சுமியின் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மம்மூட்டியின்  ‘காதல் தி கோர்’ படம் பார்த்து குழந்தையை போல அழுதேன் எனக் கூறியுள்ளார். 

நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை ஜியோ பேபி இயக்க மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவானது. இப்படம் கடந்த நவ.23 ஆம் தேதி வெளியானது.

அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் (மம்மூட்டி) தன் மனைவி ஓமணா (ஜோதிகா) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். ஒருநாள், தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்புகையில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கிறார்.

ஆனால், அடுத்த சில நாள்களில் அவருக்கு எதிராக அவர் மனைவி விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடுகிறார். விவாகரத்துக்குக் காரணமாக அவர் கூறும் காரணம் பூதாகரமாகிறது. அதுதான் படத்தின் மையக் கதை. அதிலிருந்து மம்மூட்டி எப்படி மீள்கிறார் என்பதே கதை. 

வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  நடிகை  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தனது எக்ஸ் பக்கத்தில், “மம்மூட்டி அவர்களே நீங்கள் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தனிமை, பயம், வலி, நீங்கள் எடுக்கும் முடிவின் கனம் என அனைத்தையும் நானும் உணர்ந்தேன். படத்தில் உங்களது ஒவ்வொரு பார்வையும் எனது இதயத்தை பற்றி இழுத்தது. படத்தின் சிறந்தப் பகுதியே இரண்டாம் பகுதியில் வரும் ‘என்ட தெய்வமே’தான். திரையரங்கில் ஒரு குழந்தையைப் போல அழுதேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com