லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுவரை 37 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
படம் அக்.19 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இருப்பினும், டிரைலரில் நடிகர் விஜய் கடுமையான தகாத வார்த்தை ஒன்றைப் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெண்களை இழிவுப்படுத்தும் இந்த வார்த்தையை விஜய் பேசியிருக்கக் கூடாது என்றும் பல குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருப்பவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹிந்து மக்கள் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் லியோ படக்குழு மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.