பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டில் 5 பேர் செல்லவுள்ளதாக, ப்ரோமோ ஒன்றில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே முதல் வார எவிக்ஷனில் அனன்யாவும், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாததால் பவா செல்லதுரையும், இந்த வாரம் விஜய் வர்மாவும் வெளியேறியுள்ளனர்.
கடந்த சீசன்களை போல் இல்லாமல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீடுகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கு இடையே எப்போதும் சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டவாறே உள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டில் 5 பேர் செல்லவுள்ளதாக, தற்போது வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் அக்.29 ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்பவர்கள் பற்றிய முழுவிவரம் தெரியவரும்.
இதனிடையே, பிரபல பாடகர் கானா பாலா மற்றும் நடிகை அர்ச்சனா வைல்டு கார்டில் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மூவர் குறித்த தகவல் வரும் நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.