கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைத்த ரித்திகா சிங்!
தொடர்ந்து, காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைத்து அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் ‘காந்தாரா சேப்டர் 1’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.
இந்நிலையில், இந்தப் பாகத்திலும் நாயகனாக ரிஷப் ஷெட்டியே இயக்கி நடிப்பதால் அவருக்கு, தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே பிலிம்ஸ் ரூ.100 கோடியை சம்பளமாக வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காந்தாரா முதல் பாகத்தை இயக்கி நடிக்க ரிஷப் ஷெட்டி ரூ.4 கோடி சம்பளமாக பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது, முதல் பாகத்தை விட 25 மடங்கு அதிக சம்பளத்தைப் பெறுகிறார்!