பிரபல நடிகர் சரத்பாபு(வயது 71) உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
கடந்த வாரம் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நடிகர் சரத்பாபுவின் சகோதரி, சமூகவலைதளங்களில் சரத்பாபு குறித்து பரவிய செய்திகள் பொய்யானது என விளக்கமளித்தார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல பாத்திரங்களை ஏற்று நடித்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், என பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய நிழல் நிஜமாகிறது திரைப்படத்தின் மூலம் தமிழில் சரத்பாபு அறிமுகமானார்.