இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பேசு பொருளாகியுள்ளது.
இதையும் படிக்க: ஜெயம் ரவிக்கு வில்லனாகும் ஃபஹத் ஃபாசில்?
இந்த சம்பவத்துக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை பதிவிடுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சில ரசிகர்கள் டிவிட்டரில், ‘இது அப்பட்டமான பண மோசடி, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் துணையாக இருந்துள்ளார்’ எனக் கடுமையாக பதிவிட்டு வந்தனர்.
இதையும் படிக்க: ஏ.ஆர். ரஹ்மான் மன்னிப்புக் கேட்டார்! அரசு என்ன செய்யப் போகிறது?
இதனைக் கண்ட ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளும் இசையமைப்பாளருமான கதீஜா ரஹ்மான், “ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை மோசடியாளர் என்றதுடன் சிலர் இந்நிகழ்ச்சியின் மூலம் இழிவான அரசியலையும் செய்து வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு முழுக்காரணம் அதை ஒருங்கிணைத்த நிறுவனம்தான். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2016 ஆம் ஆண்டு சென்னை, கோவை, மதுரையில் நடந்த ‘நெஞ்சே எழு’ இசை நிகழ்ச்சி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவே நடத்தப்பட்டது. 2018-ல் கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாட்டில் நிகழ்ச்சியை நடத்தினார். 2020-ல் கரோனாவால் துன்பப்பட்ட பலருக்கும் உதவினார். சமீபத்தில், 2022 ஆம் ஆண்டு சென்னையில் திரைத்துறையில் பணியாற்றும் லைட்மேன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவரைப் பற்றி தவறாக பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.