மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தார் நயன்தாரா. ஆனால், அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து 2005ல் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.
அதன்பின் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நாயகியாக மிகப்பெரிய வருகையை பதிவு செய்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்தார்.
ஒரு படத்திற்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன்தாரா, சமீபத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருந்தார். அப்படம், அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
மேலும், சம்பாதிக்கும் பணத்தை தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நம்பகமான தொழில்களில் முதலீடும் செய்து வருகிறார். இதுபோக தன் சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார்.
இந்நிலையில், நயன்தாரா சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிலை துவங்க உள்ளார். 9ஸ்கின் எனப் பெயரிப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் துவக்க விழா செப்.29 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இதற்கான, விளம்பரப் பணிகளை நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துவங்கியுள்ளார்.