நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார். இறுதியாக, விஜய் - 69 படத்துடன் அவர் சினிமாவிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது. விஜய்யின் கடைசி படமென்பதால், இதை யார் இயக்குவார் என்கிற கேள்விக்கு புதிய விடை கிடைத்துள்ளது.
தகவலின்படி, விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கினார்.
நடிகர் கமல்ஹாசன் - வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது .
இந்த நிலையில், விஜய் - வினோத் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்தே உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய நேர்காணல் ஒன்றில் வினோத், ‘நடிகர் விஜய்யை அரசியல் கதையில்தான் நடிக்க வைப்பேன்’ எனக் கூறியிருந்தார்.
தற்போது, விஜய் - 69 திரைப்படத்தை தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த டிவிவி நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளதாகவும் இதில், நடிகர் விஜய்க்கு ரூ.250 கோடி சம்பளம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி படமென்பதால் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். இதைக் கருத்தில் கொண்டே, இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனாராம்!