லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது ரஷியாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) மூலம் கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜய்காந்த்தை பிரதான பாத்திரத்தில் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் கிட்டத்தட்ட உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
இயக்குநர் வெங்கட் பிரபு, ஏஐ மூலம் கோட் படத்தில் விஜயகாந்த்தை தோன்ற வைப்பது குறித்து அனுமதிக் கேட்டு எங்கள் வீட்டிற்கு 5 அல்லது 6 முறை வந்துள்ளார். என் மகன் சண்முகபாண்டியனிடமும் இது குறித்து பேசியிருந்தார்.
நடிகர் விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறியிருக்கிறார், விஜயகாந்த்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய் மீது நல்ல மரியாதையுண்டு. எஸ்.ஏ.சி. இயக்கத்தில் விஜயகாந்த் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல், வெங்கட்பிரவுவை சிறு வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். அதனால், உனக்கும், விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் முன்னதாக தெரிவித்தேன்.
தேர்தல் நிறைவடைந்த பிறகு நடிகர் விஜய் பிரேமலதா விஜயகாந்த்தை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.