

தெலங்கானா மாநிலத்தில் இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு திரையிடலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியானதை தொடர்ந்து, மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறப்பு காட்சிக்கு தடை
தெலங்கானாவில் சமீபகாலமாக தெலுங்கு மொழியின் முன்னணி படத்தை சிறப்பு திரையிடல் செய்ய மாநில அரசு அனுமதி வழங்கி வருகின்றது.
ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய படங்களுக்கு பிரத்யேக காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சலார் திரைப்படம் அதிகாலை 1 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பாகுபலி - 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது போன்று, புஷ்பா - 2 திரைப்படத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு காட்சிக்கு அதிகளவிலான ரசிகர்கள் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நெரிசல் ஏற்பட்டு நேற்று விபத்து நேர்ந்தது.
இந்த நிலையில், தெலங்கானாவில் இனிமேல் எந்தப் படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாது என்று அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட ரெட்டி அறிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் டிச.5 காலை வெளியானது.
முன்னதாக, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி டிச. 4 இரவு 9.40 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்த காட்சிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் முன்னறிவிப்பின்றி திரையரங்குக்கு வந்ததால், கூட்டத்தினர் முந்தியடித்து செல்ல முயற்சித்தனர்.
அப்போது நெரிசல் ஏற்பட்டதில், 35 வயதான ரேவதி என்ற பெண் பலியானார், அவரது 13 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முன்னறிவிப்பின்றி வந்த நடிகர் அல்லு அர்ஜூன் உள்பட படக்குழுவினர் மீதும், திரையரங்கு மீதும் ஹைதராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.