
சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் பாலாவிற்கு விழா நடைபெற உள்ளது.
இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக இருந்து 1999 ஆம் ஆண்டில் சேது திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. சேதுவின் அபார வெற்றிக்குப் பின் நடிகர் சூர்யாவை வைத்து நந்தா திரைப்படத்தை எடுத்தார். அப்படமும் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் சூர்யாவுக்கு நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது.
அதன்பின், தனக்கென அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் எனப் பெயரெடுத்தார் பாலா. கடுமையான சண்டைக்காட்சிகள், பதற்றத்தைத் தரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என தன் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்களையே வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநராக அறிமுகமான பாலா வருகிற டிச. 10 ஆம் தேதியுடன் (சேது வெளியான கணக்கின்படி 1999, டிச.10) சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதற்காக, வணங்கான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விழா ஒன்றை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “இயக்குநர் பாலாவின் 25 ஆம் ஆண்டு கலைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடத்த உள்ளோம்.” என்பதைக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க: கூலி படப்பிடிப்பில் அமீர் கான்!
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி, பல நடிகர்களின் நடிப்புத்திறனை அடையாளப்படுத்திய இயக்குநர் என இந்தியளவில் பெயரெடுத்த பாலாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக சக இயக்குநர்கள், அவருடன் பணியாற்றிய நடிகர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.