இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் மீண்டும் துவங்கியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
மேலும், இப்பாகத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் இருவருக்குமான காட்சிகள் 1960களில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட உள்ளதால் இருவரின் தோற்றத்தையும் இளமையாகக் காட்ட டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: சஞ்சய் லீலா பன்சாலியின் முதல் தொடர்!
இந்நிலையில், ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் ’லைம்லைட்’ திரையிடலுக்கு விடுதலை - 1, விடுதலை - 2 படங்கள் திரையிடப்பட்டன. படத்தைக் கண்ட பலரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த விழாவில் இயக்குநர் ராமின் ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படமும் திரையிடப்பட்டது.