

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தமன் இசையமைக்கிறார்.
நடிகை ரீ லீலா உடன் மீனாக்ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ வழங்கியது. இந்நிலையில் இன்று (ஜன.6) நடைபெறவிருந்த முன் வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிரைலரும் இதனால் தேதி குறிப்பிடப்பாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் எதிர்பாராத சூழ்நிலை, பாதுகாப்பு காரணங்களால் பெரிதும் எதிர்பார்த்திருந்த குண்டூர் காரம் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை ஜன.6ஆம் தேதி நடத்த இயலவில்லை. இதை அறிவிப்பதற்கு மிகவும் வருந்துகிறோம்.
அடுத்ததாக இந்த நிகழ்ச்சி எங்கு, எப்போது நடக்கும் என்பதை விரைவில் அறிவிக்கிறோம். காத்திருங்கள்” எனக் கூறியுள்ளது.
ரசிகர்கள் நாளைக்கே வைக்கும்படி எக்ஸ்ஸில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்திலும் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு காரணங்களால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவுக்கும் நடந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.