‘நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர். தற்போது, கிப்ஃட் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், முகநூலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், "இன்ஸ்டாகிராம், முகநூலில் இனி எந்தப் பதிவும் செய்ய மாட்டேன். காரணம், நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் பதிவுகள் என் அப்பா, அம்மா மற்றும் சகோதரிக்குப் பிடிக்கவில்லை. ஏனென்றால், என் உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருந்தால் எல்லாரும் நிம்மதியாக இருப்பார்கள். அதனால், அப்படியே இருக்கட்டும். பலருக்கும் என் நன்றி” எனக் கூறியுள்ளார்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் அல்போன்ஸ், பலரைப் பற்றியும் அவதூறாக பதிவு செய்து வந்தார். காரணம், அவர் ஏஎஸ்டி (ஆடிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் இருக்கலாம் என ரசிகர்கள் அவர் கருத்தைப் பெரிதுபடுத்தாமல் இருந்தனர்.
இந்தச் சூழலில், அல்போன்ஸ் இன்ஸ்டா மற்றும் முகநூலிலிருந்து விலகுவதை அறிவித்திருக்கிறார்.