ரஜினி நடிப்பில் வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தில் நடிகர் வசந்த் ரவி ரஜினியின் மகனாக நடித்திருந்தார்.
நடிகர் அசோக் செல்வன் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அசோக் செல்வன் புதிதாக ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற முக்கோண காதல் கதையில் நடித்துள்ளார். ப்ரியா.வி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ஜஸ்வர்யா லஷ்மி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாது எனவும் நேரடியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வருத்தம் அளிப்பதாக உள்ளது என தனது எக்ஸ் தளப்பதிவில் வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.
அதில், "அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டுடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல், பொன் ஒன்று கண்டேன் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள அறிவிப்பைப் பார்ததும் மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருந்தது.
இந்தபடம் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். படத்தில் சம்பந்தப்பட்ட அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என யாருக்குமே தெரியப்படுத்தவில்லை. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது.
தயாரிப்பாளரின் வணிகத்தில் நடிகர்கள் அல்லது கலைஞர்களான எங்களுக்கு உரிமையில்லை எனினும் இந்த அறிவிப்பு குறித்து முறையாக படக்குழுவான எங்களிடம் தெரிவித்திருக்கலாம். எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக தெரிந்துக்கொள்ள வைக்காதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி தற்போது, வெப்பன் படத்தில் நடித்து வருகிறார்.