தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற தன் 34-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தான் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் - 2 பணிகளில் ஈடுபட இருக்கிறார்.
இதற்கான தயாரிப்புப் பணியில் இருந்தவர், புதிய விடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், “இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். அதற்காக, என் அப்பா நடிகர் அர்ஜுன் சாரிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். ஆனால், நடிகனானேன். நீங்கள் கொடுத்த ஆதரவால் இத்தனை ஆண்டுகள் நடித்தேன். தற்போது, இயக்குநராகும் நேரம் வந்துவிட்டது. 25 ஆண்டுகளுக்குப் பின் என் ஆசை நிறைவேறுகிறது. துப்பறிவாளன் - 2 படத்தை இயக்க லண்டன் செல்கிறேன்.
அங்கிருந்து, அஜர்பைஜன் மற்றும் மால்டா நாடுகளுக்குச் செல்ல உள்ளோம். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தால் எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் அது நிறைவேறும். நீங்களும் சாதிப்பீர்கள் என நம்புகிறேன். என் அப்பாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. மிஷ்கின் சாருக்கும் நன்றி. எந்தக் குழந்தையும் நான் கைவிட்டதில்லை என்பதால் உங்கள் (மிஷ்கின்) குழந்தையையும் கைவிடமாட்டேன்.” எனக் கூறியுள்ளார்.
முதலில், இப்படத்தை மிஷ்கின் இயக்க இருந்தார். ஆனால், விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.