
தமிழில், 'இருவர்', 'உன்னை போல ஒருவன்', 'ஜில்லா', 'காப்பான்' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், 'ஜெயிலர்' படத்தில் வந்த இரண்டு காட்சிகள் நிறைய கைதட்டல்களையும் விசில்களையும் மோகன்லாலுக்குப் பெற்று தந்தது.
கேரள மண்ணில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத 'தம்புரானாக' வீற்றிருக்கும் அவர், 'லாலேட்டன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
மோகன்லால் படமென்றாலே மிகப்பெரிய கொண்டாட்டமே கேரளத்தில் நடக்கும். 1977 -ல் திறனோட்டம் என்கிற படத்தில் நாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. அதன்பின், 1978-ல் இயக்குநர் ஃபாசிலின் முதல் படமான ‘மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
முக்கியமாக, கேரள சினிமாவின் முன்னோடிகளாகக் கருதப்படும் ஜி. அரவிந்தன், எம்.டி. வாசுதேவன் நாயர், பரதன், லோகிததாஸ் போன்ற திரைக்கதையாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவர்கள் உருவாக்கிய தனித்துவமான பல கதாபாத்திரங்களில் நடித்தபின்பே மோகன்லாலின் புகழ் அதிகரித்தது.
தற்போது வரை, 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக படங்களில் நடித்த நாயகர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இந்த நிலையில், இன்று மோகன்லாலின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், “கடும் விமர்சனமும் பகுத்தறிவும் உள்ள ரசிகர்கள் மத்தியில் 40 ஆண்டுகளாக முன்னணி நாயகனாக இருக்கிறார். 400 திரைப்படங்களா? சிலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். நான், அவர் 500 படங்களில் நடித்து பிரேம் நசீரின் சாதனையை முறியடிப்பதை எதிர்நோக்கியிருக்கிறேன். இந்தப் பிறந்தநாளில் என் வாழ்த்தும் அதுதான். பல சாதனைகளை முறியடிக்க நல்ல ஆரோக்கியத்துடன் இருங்கள் மோகன்லால்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.