கண்ணான கண்ணே தொடரில் நாயகனாக நடித்த ராகுல் ரவியுடன், ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த நடிகை கேப்ரியல்லா இணையவுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிக்கவுள்ளனர்.
இருவருக்கும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதால், இருவரும் இணைந்து நடிக்கவுள்ள தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியல்லா. குழந்தை நட்சத்திரமாக அப்பா, 3, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதைத் தொடர்ந்து, சின்னத்திரையில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு குவிந்தது.
மிகவும் வரவேற்பைப் பெற்ற ஈரமான ரோஜாவே தொடரின் 2ஆம் பாகத்தில் கேப்ரியல்லா நாயகியாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இந்தத் தொடரில் கேப்ரியல்லாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
இதேபோன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடரில் நாயகனாக நடித்தவர் நடிகர் ராகுல் ரவி. சமூக வலைதளத்தில் இவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கையும் அதிகம். கண்ணான கண்ணே தொடரில் நடிகை நிமேஷிகாவுடான ராகுலின் காட்சிகள் பலரைக் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் குறு விடியோக்களாக இவர்களின் காட்சிகளைக் காண முடியும். அந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளனர்.
இதனிடையே ராகுல் ரவியும், கேப்ரியல்லாவும் இணைந்து புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வானத்தைப் போல தொடரைத் தயாரிக்கும் அவுரா புரொடக்ஷன்ஸ் இந்தத் தொடரையும் தயாரிக்கிறது.