
சின்ன திரை நடிகை ஸ்வேதா நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடிக்கவுள்ளார்.
சின்ன மருமகள் தொடரின் நாயகியான இவர், நினைத்தாலே இனிக்கும் தொடரின் ரசிகர்களுக்காக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதன்மூலம் நினைத்தாலே இனிக்கும் தொடரின் திருப்பங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடர், தனது அடுத்தடுத்த திருப்பங்களால் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
2021 ஆக்ஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவருகிறது. ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஸ்வாதியின் அழகான தோற்றமும் நடிப்பும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் இத்தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
ஆன்மிக காட்சிகள் அதிகம் இருந்தாலும் அடுத்தடுத்த திருப்பங்களுக்கு பஞ்சமின்றி காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் மேலுமொரு திருப்பமாக நடிகை ஸ்வேதா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சின்ன மருமகள் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
நினைத்தாலே இனிக்கும் தொடரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் அத்தொடருக்கு ஸ்வேதாவின் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலும் குழுவினர் இம்முடிவை எடுத்துள்ளனர்.
ஒரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வெவ்வேறு தொடர்களின் நாயகிகள், இதுபோன்று மற்றொரு தொடருக்காக நடித்துக்கொடுப்பது வழக்கம். ஏனெனில் அவை இரண்டுமே ஒரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.
ஆனால், முன்னணி தொடரின் நாயகியாக நடித்துவரும் நடிகை, மாற்று தொலைக்காட்சித் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது இதுவே முதல்முறையாக பார்க்கப்படுவதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், ஸ்வேதாவின் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது நினைத்தாலே இனிக்கும் தொடருக்கு மேலுமொரு நல்ல திருப்பமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ஞாயிறு வேலைக்குச் செல்வதைப் புகழ்ந்த மணிமேகலை!
இதையும் படிக்க | விரைவில் முடிகிறது ஜனனி அசோக்குமாரின் தொடர்!