ஸ்பெக்ட்ரமும் வெங்காயமும்
உரிக்கஉரிக்க ஒன்றுமில்லாமல் போவதற்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒன்றும் வெங்காயம் அல்ல... அது இந்திய நாட்டுக்கே ஏற்பட்ட அவமானம். நாட்டையே உலுக்கும் ஓர் ஊழல் பிரச்னை வெடித்தால், அதை மக்கள் மறக்கச் செய்யவும்,


உரிக்கஉரிக்க ஒன்றுமில்லாமல் போவதற்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒன்றும் வெங்காயம் அல்ல... அது இந்திய நாட்டுக்கே ஏற்பட்ட அவமானம்.
நாட்டையே உலுக்கும் ஓர் ஊழல் பிரச்னை வெடித்தால், அதை மக்கள் மறக்கச் செய்யவும், ஊழலைத் திசைதிருப்புவதும் வேறொரு பிரச்னையைப் பெரிதாக்குவதும் அரசியல்வாதிகள் காலங்காலமாகச் செய்துவரும் ராஜதந்திரம்.
தற்போது மிகப்பெரிய பிரச்னையாகப் பேசப்பட்டுவரும் வெங்காய விலை ஏற்றமும் இதைப் போன்றதுதானோ என எண்ணத் தோன்றுகிறது.
மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை வெங்காய விலை ஏற்றத்துக்கு ஊடகங்கள் ஒதுக்கி வருகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் ஒப்பிடுகையில் வெங்காய விலை ஏற்றம் ஒரு பிரச்னையே அல்ல. இதுவரை நடந்த ஊழல்களில் மிகப்பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம்தான் எனக் கூறப்படுகிறது. அதிலும் நம்நாட்டுக்கு வரவேண்டிய ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு சில தனியார் தொழிலதிபர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டவருக்கும் ஆதாயமாக்கப்பட்டுள்ளது.
இது வெறும் பொருளாதாரப் பிரச்னை மட்டுமல்ல. தேசத்தின் பாதுகாப்புக்கே சவால்விடக்கூடிய மிகவும் முக்கியமான பிரச்னை. இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்னையைத்தான், வெங்காய விலை உயர்வுப் பிரச்னை மூலம் திசை திருப்பிவிடலாம் என அரசியல்வாதிகள் கனவுகாண்கின்றனர் போலும். இவர்கள் நினைக்கும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்ல. தேசத்தின் கடைக்கோடியில் உள்ள சிறு கிராம வாசிகளுக்குக்கூட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏதோ மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது; அதற்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், திமுகவின் அதிகார மையமும்தான் காரணம் என்ற அளவிலாவது புரிந்து வைத்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஒரு பூதாகாரமான பிரச்னை உருவாகிறது என்றால், அதிலிருந்து மக்களைத் திசைதிருப்ப, முதலில் தலித் என்ற ஆயுதம் எய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பார்ப்பனிய ஆதிக்கம், இந்துமத துவேஷம் போன்ற பிரச்னைகள் எழுப்பப்பட்டன. வேறு வழியே இல்லை என்றால் இலங்கைத் தமிழர் பிரச்னை பெரிதாகப் பேசப்படும். இதன் மூலம் ஏற்கெனவே உள்ள பிரச்னை திசைதிருப்பப்பட்டு விடும்.
மத்திய அரசுக்கு இருக்கவே இருக்கிறது தீவிரவாதம், மதவாதம் உள்ளிட்ட பிரச்னைகள். தற்போது வெங்காயம் கைகொடுத்திருக்கிறது.
50 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை கொலைக்குற்றவாளியைப்போல அழைத்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். ஆனால், ஆயிரமாயிரம் கோடிகளை வாரிச் சுருட்டி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கும் அரசியல்வாதிகள், போலீஸ் பாதுகாப்புடன் உலா வருகின்றனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற இமாலய ஊழல் எனத் தொடர்ந்து பல்வேறு ஊழல்கள் கம்பீரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், மத்திய அரசோ எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்கவும் முன்வரவில்லை.
இந்த ஊழலை எதிர்க்க, இப்போது நீதிமன்றம் மட்டுமே ஒரு வாய்ப்பாக உள்ளது. ஆனால், சட்டத்தின் சந்துபொந்துகளிலும் நுழைந்து தப்பிவரும் ஊழல்வாதிகளைத் தண்டிக்க மக்களிடம் வாக்கு என்னும் ஆயுதம் உள்ளது.
இனியாவது ஊழல்வாதிகளை இனம்கண்டு, அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...