இந்தியத் தலைநகரம் புது தில்லிக்கு இன்று நூறாண்டு. தனிமனித வாழ்க்கையில் நூற்றாண்டு நிறைவு செய்வோர் ஒரு சிலரே. அத்திப்பூ போல. ஒரு நகரத்துக்கு நூற்றாண்டு என்பது மிகச் சிறிய தொடக்கம். ஆனால், தலைநகரமாய் நூறாண்டு என்பது வரலாற்று நிகழ்வு.
தில்லி எனப்படும் பழைய தில்லிக்கு 5000 ஆண்டுகால எழுதப்படாத வரலாறு உள்ளது. மக்களின் நினைவடுக்குகளின் வழியே அந்த வரலாறு காலம் காலமாய் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மகாபாரதத்தில் பாண்டவர் தலைநகராய் வரும் இந்திரப்பிரஸ்தம்தான் தில்லி. சம்ஸ்கிருதத்தில் ஹஸ்தினாபூர் - யானைகளின் நகரம் என்று பொருள். தில்லி ஒரு தலைநகரமாய்தான் நமக்கு முதலில் அறிமுகமாகிறது.
யமுனை நதியின் கரையில் அமைந்திருக்கும் தில்லி, தன்னுடைய இன்னொரு பக்கத்தில் தார் பாலைவனத்தைக் கொண்டுள்ளது. ஆளை எரித்துவிடும் வெப்பமும், சுருட்டி எடுத்துக் கொள்ளும் புழுதிக் காற்றும், நடுங்குகிற குளிரும் தில்லியின் தட்பவெப்ப நிலையாய் இருப்பதற்கு இந்தப் புவியியல் அமைப்பே காரணமாகும்.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து நமக்கு தில்லியைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு கிடைக்கிறது. எழுதப்பட்ட என்றால் ஆட்சி செய்த மன்னர்கள், ஆட்சிக்காலம், நடந்த போர்கள், கொலைகள், கொள்ளைகள்... இப்படியான தகவல்கள் மட்டுமே. இதைத்தாண்டி, மக்களின் வரலாறாய் ஒன்றும் எழுதப்படவில்லை.
தில்லி தலைநகரமாய் வரலாறு முழுக்க இருந்துள்ளது. அரசர்களின் அரசியல் விளையாட்டாக தில்லியிலிருந்து தலைநகர மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
தலைநகர மாற்றத்துக்குப் பெரியதாக ஒன்றும் காரணங்கள் இருக்க வேண்டியதில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட மூவருலாவில், தலைநகரம் மாற்றம் பற்றி... "அரசர்களின் ராஜ விளையாட்டு' எனக் கூறப்பட்டுள்ளது. சோழர்களின் தலைநகரம் தஞ்சையில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டதை மூவருலா குறிப்பிடலாம். ராஜராஜ சோழனின் காலத்தால் அழியாத பெருமை தஞ்சை.
தன் தந்தையைப் போலவே தானும் அழியாப் புகழ் பெற வேண்டும் என்று ராஜேந்திர சோழன் புதியதாக அமைத்த ஒரு நகரமே கங்கை கொண்ட சோழபுரம். பெரிய கோயில் போல் ஒரு கோயில்; தஞ்சையைப் போன்ற நகர அமைப்பு; சோழ கங்கம் ஏரி என ராஜேந்திர சோழன் புதிய தலைநகரையே நிர்மாணித்தான்.
இப்படியான ஆக்கப்பூர்வமான தலைநகர மாற்றத்தையே மூவருலா ராஜ விளையாட்டு என குத்தலாகச் சொல்கிறது. ஆனால், வெற்றுக் காரணங்களுக்காக உலகம் முழுவதும் தலைநகரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
2005-ம் ஆண்டு மியான்மரின் தலைநகரம் ரங்கூனிலிருந்து நைபிடவுக்கு மாற்றப்பட்டது. இத்தலைநகர மாற்றத்துக்கு அடிப்படை வெறும் சோதிடக் காரணங்களே.
நாடுகள் தங்கள் தலைநகரங்களை மாற்றிக்கொள்ள சில அடிப்படை விதிகளையும், விதிமீறல்களையும் கொண்டுள்ளன. ஒரு நகரம் தலைநகரமாய் இருக்க அந்நாட்டின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நகரமாய் இருக்க வேண்டும். நாட்டின் பிற நகரங்களுடன் எளிதான போக்குவரவுக்கு ஏற்றபடி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தில்லியைப் பொறுத்தவரை இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரம்தான். முதலிரண்டு நகரங்கள் மும்பை, கொல்கத்தா. வாணிபத்துக்கு ஏற்ற வகையில் நில வழியாலும், கடல் வழியாலும் இணைக்கப்பட்டவை கொல்கத்தாவும், மும்பையும். ஆனால், பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் சுதந்திர இந்தியாவுக்கும் தலைநகராகும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் தில்லிக்குத்தான் வாய்த்தது.
1857-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகம் பிரிட்டிஷாரிடம் பீதியை உண்டு பண்ணியது. அதுவரை கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை பிரிட்டிஷ் அரசு நேரடியாகத் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்தது.
இந்தியாவின் முதல் பேரரசியாக விக்டோரியா மகாராணி பதவியேற்றார். அவருக்குப் பின் மூன்று பேர் பதவியேற்றனர். நான்காம் அரசராய் ஐந்தாம் ஜார்ஜ் அரசர் பிரிட்டிஷ் இந்தியாவின் மன்னராய் முடிசூடிக்கொள்ள வருகை புரிந்தார்.
இந்தியாவுக்கு வந்து பிரிட்டிஷ் இந்தியாவின் அரசராக முடிசூடிக் கொண்ட ஒரே மன்னர் இவர்தான். 40 நாள்கள் பயணமாக இந்தியா வந்த இவரின் பயண நாள்கள் கட்டவிழ்த்துவிட்ட வெறித்தனம் நிரம்பிய கோலாகலமான நாள்கள்.
தன்னுடைய மனைவி ஆனியுடன் இந்தியா வந்த இவர் முதலில் அசாம் காடுகளில் வேட்டைக்குச் சென்றார். ஒரே நாள் வேட்டையில் 20 காண்டாமிருகங்களும் 6 புலிகளும் கொல்லப்பட்டன.
வேட்டையை ஒரு திருவிழாபோல் பெருங்கூட்டத்துடன் சென்று கொண்டாடினர். அவர் பதவியேற்பதற்காக அதுவரை தலைநகராய் இருந்த கல்கத்தாவை விட்டு தில்லி நகரைத் தேர்ந்தெடுத்தார். பட்டமேற்பு விழாவுக்காக புதிய மணிமுடி, மன்னர் அமர்வதற்கான அலங்காரமான இருக்கை என ஏகப்பட்ட அமர்க்களங்கள்.
1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் நாள் தில்லியில் ஐந்தாம் ஜார்ஜ் அரசரின் பட்டமேற்பு விழாவுக்காக தர்பார் ஹால் நிரம்பி வழிந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியாளர்களான வைசிராய், ஆளுநர்கள், ஐசிஎஸ் அலுவலர்கள், இளவரசர்கள், இந்திய பிரபுக்கள் உள்ளிட்டோர் தர்பார் ஹாலில் இருந்தனர்.
அப்பட்டமேற்பு விழாவில் "பிரிட்டிஷ் இந்தியத்தின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்படுவதாக'' அரசர் தானாக அறிவிக்கிறார். இதை வரலாற்றுப் பிரகடனம் என்று பெருமிதத்துடன் கூறினார்.
வரலாற்றுப் புகழ்பெற்ற தலைநகர மாற்றத்துக்கான அறிவிப்பு நூறாண்டுகளுக்கு முன் 1911-ம் ஆண்டு இதே டிசம்பர் 12-ம் நாள் அறிவிக்கப்பட்டது.
அன்று தொடங்கி இன்றுவரை தில்லி இந்தியாவின் தலைநகராய் இருக்கிறது. தில்லி ஏழு நகரங்களை உள்ளடக்கிய ஒரு நகரம்.
வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வோர் அரசர்கள் தங்கள் புகழுக்காக ஒவ்வொரு நகரங்களை உருவாக்கினார்கள். ஐந்தாம் ஜார்ஜ் அரசனும் தில்லி இந்தியத்தின் தலைநகரம் என்று அறிவித்தவுடன், தலைநகரம் எங்கு அமைய வேண்டும் என யோசிக்கிறார்.
பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணர் எட்வின் லூட்டியன்ஸிடம் புதிய தலைநகரம் அமைப்பது பற்றி அரசர் ஆலோசனை செய்தார். அதற்கு எட்வின் லூட்டியன்ஸ் கூறிய வார்த்தைகள்: எனக்குக் கொஞ்சம் காலியிடமும், சமாதிகளும் இல்லாத பூமி வேண்டும்.
இந்த ஏழு நகரங்களைத் தவிர்த்து புதியதாக ஒரு நகரை நாம் உருவாக்க வேண்டும் என கூறுகிறார். உண்மைதான். தில்லி அழகுபடுத்தப்பட்ட சமாதிகள் நிரம்பிய நகரம். அதனால் சமாதிகள் இல்லாத எட்டாவது நகரமாய் புது தில்லியைத் திட்டமிட்டு, தீர்மானித்து உருவாக்கினர்.
புது தில்லியில்தான் நாடாளுமன்றமும், குடியரசுத் தலைவர் மாளிகையும், இந்தியா கேட்டும் உள்ளது.
இந்நகரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மன்னர் அறிவித்த மூன்று நாள்கள் கழித்து டிசம்பர் 15-ம் தேதி 1911-ம் ஆண்டு நடைபெற்றது. ஐந்தாம் ஜார்ஜ் அரசர் ஒரே நாளில் தலைநகர் மாற்றம் என்ற முடிவை அறிவித்ததாகத் தோன்றும். ஆனால், 1905-ம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷ் அரசு தலைநகரத்தை மாற்றக் காரணங்களைத் தேடிக் கொண்டிருந்தது.
பிரிட்டிஷார் 1905-ம் ஆண்டு வங்கப் பிரிவினையைத் திட்டமிட்டுச் செய்திருந்தனர். வங்காளத்தின் கிழக்கு மேற்குப் பகுதிகளைப் பிரித்து இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்கினர்.
இந்து - முஸ்லிம் பிரிவினையின் காரணமாய் கொல்கத்தா பதற்றத்துக்குரிய நகரமாய் மாறிவிட்டது. அதனால் அவர்கள் மிகத் தீவிரமாய் தலைநகர மாற்றத்தைப் பற்றி யோசித்து வந்தனர். அவர்கள் மனதில் தில்லியும் மும்பையும் இருந்தன. இறுதியில் தில்லி என்று முடிவானது.
தில்லி நான்கு திசைகளிலும் தன்னை நீட்டித்துக் கொள்ளக்கூடிய நிலப்பரப்புடன் இருந்ததுதான் முக்கிய காரணம்.
இந்த இடத்தில் எட்வின் லூட்டியன்சுடைய வார்த்தைகளை மீண்டும் யோசிக்கலாம். சமாதிகள் இல்லாத தில்லி வேண்டும் என்று அவர் கூறியது தில்லியின் ரத்த வரலாற்றை உள்ளடக்கியவை.
தில்லியின் படுகளங்கள் ஏராளம். தில்லிக்கு அருகில் உள்ள குருúக்ஷத்திரம், மகாபாரதப் போர் நடைபெற்ற இடம். பானிப்பட் - மூன்று பானிப்பட் யுத்தங்களைக் கண்ட பூமி. ஆப்கானிஸ்தானத்திலிருந்தும், பாரசீகத் (ஈரான்)திலிருந்தும் பேரரசக் கனவுகளுடன் கிளம்பி வந்தவர்கள் நடத்திய படுகளங்கள்... மொகலாயர்கள் ஆட்சியில் தில்லி கண்ட யுத்தங்கள்... என 5000 ஆண்டு ரத்த வரலாறு தில்லிக்கு உள்ளது.
முடத் தைமூர் என்றும் தைமூர் என்றும் அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானிய அரசன் தில்லியை நோக்கி 20,000 குதிரைப்படை வீரர்களுடன் படையெடுத்து வந்தான்.
இஸ்லாம் மதப் போதகர்கள், போர்வீரர்கள், கொள்ளைக்காரர்கள் உள்ளடங்கிய அப்படை தில்லி நகரத்தின் வீதிகளைச் சூறையாடியது. எதிர்ப்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தது. 1,00,000 மனித மண்டையோடுகளால் ஒரு பிரமிடை உருவாக்கிக் கொக்கரித்து மகிழ்ந்தான் தைமூர். "எங்கள் நாட்டில் ஒரு குருவியைக்கூட கொல்லாதவன் இந்தியாவில் குறைந்தது 50 பேரையாவது கொன்று கொக்கரித்தான்' என தைமூர் தன்னுடன் வந்த மதபோதகர்களைப் பற்றிக் கூறுகிறான். எதிர்ப்பையே காட்டாத தில்லி மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய வரலாற்று வன்முறை தைமூரின் படையெடுப்பு.
இம்மாபெரும் படுகொலைகளை நிகழ்த்திவிட்டு தைமூர் தில்லியின் அரசனாகத் தன்னை அறிவித்துக் கொள்கிறான். நாட்டை வென்றெடுக்காமல் மக்களைக் கொன்றுவிட்டு அரசன் என்று அறிவித்துக்கொண்ட விநோதம் இது. அவன் அறிவித்துக் கொண்ட விதம் இன்னும் விநோதம். வரிசையாக 200 யானைகளை நிற்க வைத்து, தனக்கு வணக்கம் செலுத்தச் செய்து "தில்லியின் அரசன்' என்று அறிவித்துக் கொள்கிறான்.
முகமது-பின்-துக்ளக் - தன் தலைநகரை தேவகிரியில் இருந்து தில்லிக்கு மாற்றினான். ஆட்சியாளர்கள் மட்டும் மாறாமல் மக்களும் இடம்பெயர வேண்டும் என்று முட்டாள்தனமாக ஆணையிட்டான் அம்மன்னன்.
மக்கள் குழந்தை, குட்டிகளுடன் தேவகிரியில் இருந்து தில்லிக்கும், தில்லியில் இருந்து தேவகிரிக்கும் இடம் பெயரத் தொடங்கினர். அவர்கள் சென்றடைவதற்குள்ளேயே மீண்டும் தலைநகரை தில்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றி மக்களை அவரவர் நகரத்துக்குத் திரும்ப ஆணையிட்டான். வழியில் விழுந்து மாண்டு போனவர்கள் ஏராளம். ஊர் திரும்பியவர்கள் கொஞ்சம் பேரே. காரணம் தேவகிரிக்கும் தில்லிக்கும் 500 கி.மீ. தூரம்.
மொகலாயர் ஆட்சி நிர்மாணத்தில் சிந்தப்பட்ட ரத்தம் 250 ஆண்டுகள் காயாமல் இருந்தது. அதன்பிறகு தில்லி சந்தித்த மிகப்பெரிய பேரிழப்பு இந்தியப் பிரிவினை.
1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்தபோது தில்லி ரத்தக் கண்ணீருடன் அக்காட்சிகளைப் பார்த்தவாறிருந்தது.
உலகின் மிகப்பெரிய மனிதப் பரிமாற்றம் ரத்த சகதியில் நடந்தது. லாகூரிலிருந்து தில்லிக்கும் தில்லியில் இருந்து லாகூருக்கும் மக்கள் கண்ணீருடனும் ஆறாத் துயருடனும் பிரிந்து சென்றனர். இனப்பிரிவினையால் தில்லி சந்தித்த பேரிழப்பு.
இறுதியாய் 1984-ம் ஆண்டு அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது நடத்தப்பட்ட சீக்கியப் படுகொலைகள்.
இவ்வளவு பெரிய மனித இழப்புகளை, ரத்த ஆறை வேறெந்த நகரமாவது சந்தித்து இருக்குமா என்பது சந்தேகமே. தில்லியின் மண் முழுவதும் ரத்தவாடை. இருப்பினும் தில்லி தன் புனிதத்தன்மையை ஒருபோதும் இழந்ததில்லை.
குருúக்ஷத்திரத்தால் இந்துக்களுக்கும், மொகலாயர் தலைநகராய் இருந்ததால் இஸ்லாமியருக்கும் தில்லி புனித நகரம்.
தில்லி ஏதிலியர் நகரம் என்று அழைக்கப்படுகிறது. அரசர்களாலும், கொள்ளைக்காரர்களாலும், அதிகாரம் மிக்கவர்களாலும் காலங்காலமாக மக்கள் அடித்து விரட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தில்லி தன் படுகளங்களுக்கிடையிலும் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது.
இத்தனை பேரழிவுகளில் இருந்தும் தில்லி தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. தன் அழகை தில்லி ஒருபோதும் தவறவிட்டதே இல்லை. இன்றும் தில்லி கட்டடக் காதலர்களின் நகரம்.
தில்லியில் உள்ள பாரம்பரியக் கட்டடங்கள் உலகப் பரம்பரை வரலாற்றின் பொக்கிஷங்கள். அவற்றுக்கெல்லாம் விலை நிர்ணயிக்க முடியுமெனில்... உலகின் வல்லரசு என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் செல்வ வளத்தைவிட இந்தியாவின் செல்வ வளம் பத்து மடங்கு இருக்கும்.
புது தில்லியை தலைநகராக்கியதன் மூலம் இங்கிலாந்து, இந்தியா என்ற ஒரு பேரரசை ஒன்றுபடுத்தி, அதை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்கீழ் கொண்டுவந்து விட்டோம் என்பதே உலகுக்குச் சொல்ல விரும்பிய செய்தி. இந்தியா என்ற ஒன்றுபட்ட நிலப்பரப்பின் முகமாய் தில்லி அன்று தொடங்கி இன்றுவரை மிளிர்கிறது.
வெறும் எழுபதாயிரம் பேருக்காக உருவாக்கப்பட்ட தில்லியில் இன்று 1.70 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது தில்லி. அழிவுகளையெல்லாம் தன்னின் அடித்தளமாக்கிக் கொண்டு நிற்கும் தில்லியின் முகம், இன்று இந்தியாவின் முகம்.
தில்லி என்றால்... இதயத்திலிருந்து நேரடியாக என்று பொருள். தில்லி என்றால் இன்று... இந்தியாவின் இதயத்திலிருந்து என்று பொருள்.
இந்தியாவின் இதயத்துக்கு இன்று நூறாண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

1200 நாள்களைக் கடந்த எதிர்நீச்சல் தொடர்!
பிரசாந்த் படத்தில் கதாநாயகியான தேவயானி மகள்!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் உயர்வு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

