அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மெளனம் கலையுமா...

அண்மைக்காலமாக இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஊடகங்களில் வரும் தகவல்கள் தொழில் துறையினர், வர்த்தகர்கள் மட்டுமல்லாமல் பாமரன்கூட பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால், பொருளாதார மேதை என்று போற்றப்படும்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:26 pm

எம். சடகோபன்

அண்மைக்காலமாக இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஊடகங்களில் வரும் தகவல்கள் தொழில் துறையினர், வர்த்தகர்கள் மட்டுமல்லாமல் பாமரன்கூட பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ஆனால், பொருளாதார மேதை என்று போற்றப்படும் பிரதமரையும், பொருளாதார வல்லுநர் என்று சொல்லப்படும் நிதி அமைச்சரையும் கொண்டுள்ள மத்திய ஆளும் கூட்டணி அரசு, வாய் திறக்காமல் மெüனம் காப்பதுதான் ஏன் என்று புரியவில்லை.

 பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. உலக அளவில் பொருளாதாரத் தேக்க நிலை இருப்பதால் அதன் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது என்றும் இப்படிப்பட்ட நிலையில், 6.5 முதல் 7 சதவிகித பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய சாதனைதான் என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிவருவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. ஸ்திரமான, வேகமான பொருளாதார வளர்ச்சி என்பது வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்வதில்லை.

 வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், வறுமையை ஒழிப்பதிலும் முக்கியப் பங்காற்றும் என்பதை மறந்துவிடக் கூடாது என்று கூறுகின்றனர் மார்க்கெட் வல்லுநர்கள்.

 பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளில் வட்டிவிகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி 13 முறை உயர்த்தியுள்ளது. ஆனால், பலன் ஏதும் ஏற்படவில்லை.

 2ஜி முறைகேடு உள்பட பல்வேறு ஊழல்கள் பூதம்போல் அச்சுறுத்தி வருகின்றன. மேலும், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை நிறுத்தி வைத்தது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 அன்னிய நிறுவன முதலீட்டாளர்களைப் பெரிதும் கவர்ந்து இழுக்கும் பங்குச் சந்தையும் சரிவிலிருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. இதனால், முதலீடுகளை மேற்கொள்வதில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களிடையே பயம் தொற்றிக் கொண்டுள்ளது.

 இதற்கிடையே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 20 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. உலக அளவில் மற்ற கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.

 டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.50 வரை சரியும் என்று தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், ரூ.53.50-யும் கடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 ஐரோப்பிய கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாத நிலை உள்ளது. உள்நாட்டில் அமெரிக்க டாலர்கள் அதிக அளவில் வாங்கப்படுவதால் அதன் மதிப்பு விண்ணை நோக்கி பயணித்துவிட்டது. இதுபோன்ற சம்பவங்களே நிலைமை மோசமடைவதற்குக் காரணம் என்கிறது அரசு. ஆனால், ரூபாயின் மதிப்பு குறைவதைக் தடுக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றே தொழில்துறையினர் கருதுகின்றனர். தர நிர்ணய நிறுவனங்களும் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.60 வரை செல்லும் என்கிறது.

 நாட்டின் நிதிப் பற்றாக்குறையும், வருவாய் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் இதை அறிய முடிகிறது. இந்த ஆண்டு முதல் 7 மாதங்களில் வரி வருவாய் 45.50 சதவிகிதமே இருந்துள்ளது.

 கடந்த ஆண்டு இதே காலத்தில் 65.50 சதவிகிதமாக இருந்துள்ளது. உணவு, உரம், எரிபொருள் மானியம் உயர்வு போன்றவை நிதிப் பற்றாக்குறையை உயர்த்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.27,000 கோடி தேவை என்று சொல்லப்பட்டாலும், ரூ.3 லட்சம் கோடி வரை செலவுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிதிப்பற்றாக்குறை உயரும் அபாயம் உள்ளதை பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதைச் சமாளிக்க, முதற்கட்டமாக முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீடுகளைக் கவர்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மேலும், இப்போதுள்ள இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் அவர்களின் முதலீடுகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது கட்டாயம்.

 இந் நிலையில், உள் கட்டமைப்பை மேம்படுத்தவும், பொருளாதாரத் தேக்க நிலையைப் போக்கவும் கையிருப்பில் உபரியாக உள்ள அன்னியச் செலாவணி நிதியை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும்.

 இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயலாற்றினால் கண்டிப்பாக நல்லது நடக்கும் என்கின்றனர் தொழில்துறையினர். வெறும் வரி வருவாயை மட்டுமே நம்பி இருந்தால், வளர்ச்சி இலக்கை எட்ட முடியாது என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 இந் நிலையில் வர்த்தகர்களும் தொழில் துறையினரும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் துறை உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. மெüனம் கலையுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.