இறந்த பின்பும் இனிதாக...

மனிதனின் உயர்ந்த பண்புகளில் ஒன்று தருமம் செய்வது. இருப்பவன். இல்லாதவனுக்கு எதையும் எதிர்பார்க்காமல் ஒன்றை அளிப்பதே தருமம் ஆகும்.

மனிதனின் உயர்ந்த பண்புகளில் ஒன்று தருமம் செய்வது. இருப்பவன். இல்லாதவனுக்கு எதையும் எதிர்பார்க்காமல் ஒன்றை அளிப்பதே தருமம் ஆகும். ஒளவையார், அறம் செய்க என்று சொல்லாமல், அறம் செய விரும்பு என்றார்.
அறம் தேவைக்கு ஏற்ப மாறுபடுகிறது. உயிருடன் இருக்கும்போதே ஒன்றை வழங்குவது, உயிர் பிரிந்த பிறகு அளிக்கும் நிலை, உயிர் இருந்தும் மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் தானமாகத் தருவது.
உயிருடன் இருக்கும்போது, ஒருவன் தானே முன் வந்து கொடுக்கலாம். அடுத்த இரண்டு நிலைகளில் உடன் இருப்பவர் - உறவினர் - இறந்தவரின் உடலை அறச் செயலுக்கு அளிக்கும் நிலை அமையும்.
இறந்தவர் ஒருவராக இருந்தாலும் அவருடைய உறுப்புக் கொடையால் ஏழு பேர் உயிர் பிழைக்க முடியும். கண், இதயம், நுரையீரல், உடல் தோல், எலும்பு, நரம்பு, எலும்பு மஜ்ஜை முதலியவை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்தப்படும். இதனால் பலர் உயிர் காப்பாற்றப்படும்.
உயிர் வாழ்வதற்கு ரத்தம் இன்றியமையாதது. விபத்து நேரும்போதும், அறுவை சிகிச்சை செய்யும்போதும் வீணாகும் ரத்தத்திற்கு இணையாக மற்றவரின் ரத்தம் தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலைகளில் மற்றவரின் ரத்தம் கிடைக்குமானால் ஓர் உயிர் காப்பாற்றப்படும். 2014-ஆம் ஆண்டுக் கணக்குப்படி, தமிழ்நாட்டில் 94 ரத்த வங்கிகள் உள்ளன.
மனிதனின் உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்தால், மற்றொருவனுக்கு ஒரு சிறுநீரகம் தானமாகத் தரப்பட்டால், இதுவும் சிறுநீரகத் தானமாகக் கருதப்படும்.
உயிருடன் இருக்கும்போதே ஒருவர் தன் கண்களைத் தானமாகத் தர விரும்புவதாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவர் இறந்த பிறகு அவருடைய கண் எடுக்கப்பட்டு, அது பார்வையில்லாத வேறு ஒருவருக்குப் பொருத்தப்படும்.
கண்தானத்தின் முன்னோடி வழிகாட்டி கண்ணப்பநாயனார். சிவபெருமானின் ஒரு கண்ணில் ரத்தம் வழிவதைக் கண்ட அவர், தன் கண்ணை எடுத்துச் சிவபெருமானின் கண்ணில் அப்பினார். ஆகவே திண்ணன் என்ற பெயருடன் இருந்த அவர் கண்ணப்பன் என்ற சிறப்புப் பெயருடன் பின்பு விளங்கினார்.
மூளைச்சாவு என்பது மூளை செயலை இழந்த நிலை. உடலில் உயிர் இருந்தாலும், அவரால் வாழ முடியாது. இந்த நிலையில் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல், தொண்டையிலுள்ள ஒலி எழுப்பும் உறுப்பு, கருப்பை, கண், விரல், ரத்த நரம்புகள், உடல் தோல், காதின் உள்ளுறுப்பு, முன்கை முதலியவை பெறப்பட்டு பிறருக்குப் பொருத்தலாம்.
மூளைச்சாவு மட்டுமன்றி இருதயச்சாவு நடைபெற்றாலும் உறுப்புத் தானம் செய்யப்படலாம். மருத்துவர், மூளையும் இருதயமும் இனி செயல்படாது என்று உறுதி அளித்த பிறகு, இறந்தவரின் குடும்பத்தினர் சம்மதத்துடன் தேவையான உறுப்புகள் எடுக்கப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படும்.
ஸ்வீடன் நாட்டில் கோத்தன்பர்கு பல்கலைக்கழகத்தில் செயற்கைக் கருப்பை, பொருத்தும் அறுவை வெற்றிகரமாக நடைபெற்றது. அதுவே உலகின் முதல் கருப்பை பொருத்துதலாகும்.
பொதுவாக, மற்றவரின் உடல் உறுப்பை நோயாளியின் உடம்பு ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் கிளீவ்லாந்து மருத்துவமனையில் கருப்பை இல்லாத ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் கருப்பை பொருத்தப்பட்டது. ஆனால் அது பெற்றுக் கொண்டவரின் உடலுடன் இணையவில்லை.
மருத்துவர்கள் மனம் சோர்வடைந்தார்கள். பிறகு செயற்கை கருப்பை பொருத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. இனி அந்த பெண்ணால் கருக்கொள்ள முடியும் என்ற மகிழ்ச்சி நிலையும் பிறந்தது.
உலக அளவில் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் 35 விழுக்காட்டுடன் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்து இங்கிலாந்து (27%). மூன்றாம் இடத்தில் அமெரிக்கா (26%). ஆனால் இந்தியாவில் 0.5% மட்டுமே.
இந்தியாவில் உறுப்புத் தானத்தில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதன் விழுக்காடு 1.15%. கேரளம் 0.36%, கர்னாடகம் 0.28%, ஆந்திரம் 0.15%. இந்த புள்ளிவிவரத்தில் தமிழகம் முதன்மை நிலையில் இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.
இந்தியாவில் 1.5 லட்சம் பேருக்குச் சிறுநீரக உறுப்பு தேவைப்படுகிறது. ஆனால் 3,000 பேரின் சிறுநீரகமே உறுப்புத் தானமாகக் கிடைக்கிறது. 25,000 பேருக்கு ஈரல் உறுப்பு வேண்டியதாக உள்ளது. ஆனால் 800 ஈரல் உறுப்பே கிடைக்கிறது.
உறுப்புத் தானம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. 2012-இல் 0.18 விழுக்காடு இருந்த அது, தற்போது 0.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஒருவரின் உடம்பிலிருந்து தானமாகக் கண் எடுக்கப்பட்டால், அடுத்த பிறவியில் அவர் குருடனாகப் பிறப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த எண்ணம் அகற்றப்பட வேண்டும். உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பெருக வேண்டும்.
உறுப்புத்தானம் செய்ய ஜ்ஜ்ஜ்.ர்ழ்ஞ்ஹய்.க்ர்ய்ஹற்ண்ர்ய் க்ஹஹ்.ண்ய். என்று இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவருக்குக் கொடையாளர் சீட்டு ஒன்று வழங்கப்படும். இந்தியாவில் உறுப்பு மாற்றுச் சட்டமும் உள்ளது. தேவைப்படும் தகவல்களை இது அறிவிக்கும்.
மண்ணில் புதைத்தால், எரியூட்டினால் உடலின் உறுப்புகள் வீணாகிப் போகின்றன. இறந்தவரின் உடலிலிருந்து தேவைப்படும் உறுப்பை நீக்கி விடுவதால் இறந்தவருக்கும் எவ்வித இழப்பும் இல்லை.
ஒருவருடைய உடலிலிருந்து எடுக்கப்படும் உறுப்புகளால் பலரின் உயிர் காப்பாற்றப்படுகிறது. அவர்களின் கண்ணீர் துடைக்கப்படுகிறது. அவருக்கும் அவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சி பிறக்கிறது. புதுவாழ்வு கிடைக்கிறது.
இறந்த பிறகும் ஒருவர் உறுப்புத் தானம் மூலம் இனிதாக வாழலாம். தடையை மீறி வெற்றி பெற்றால், சமுதாயம் தழைக்கும், சில உயிர்கள் பிழைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com