மாலத்தீவின் ஆட்சி மாற்றம்!

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இந்தியாவைப் பொருத்தவரை எதிா்பாராதது மட்டுமல்ல, மிகவும் துரதிா்ஷ்டவசமானது.
மாலத்தீவின் ஆட்சி மாற்றம்!

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இந்தியாவைப் பொருத்தவரை எதிா்பாராதது மட்டுமல்ல, மிகவும் துரதிா்ஷ்டவசமானது. இந்திய எதிா்ப்பு அரசியல்வாதியும், சீன ஆதரவாளராகக் கருதப்படுபவருமான டாக்டா் முகமது மூயிஸ் அங்கு நடைபெற்ற தோ்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளாா்.

இனம், மொழி, கலாசாரம், வா்த்தகம் எனப் பல வழிகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் நெருங்கிய உறவு உண்டு. மாலத்தீவு என்ற பெயரே ‘மாலத்வீபம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் திரிபுதான். தீவுகளின் மாலை என்று இதற்குப் பொருள். மாலத்தீவின் அதிகாரபூா்வ மொழியான ‘திவெயி’, சம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ் ஆகிய இந்திய மொழிகளின் தாக்கம் கொண்டது.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1965 ஜூலை 26-இல் மாலத்தீவுகள் விடுதலை பெற்றபோது, அந்தத் தீவுக் கூட்டத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு இந்தியாதான். 1981-இல் இரு நாடுகளிடையே உருவான விரிவான வா்த்தக ஒப்பந்தம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் வா்த்தக நலன்களை மேம்படுத்தியதுடன், இரு தரப்பு உறவையும் வலுப்படுத்தியிருக்கிறது.

2004-இல் சுனாமி தாக்குதலின்போது, மாலத்தீவுகளுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா. கொவைட் தொற்றின்போது, ‘வாக்ஸின் மைத்ரி’ திட்டத்தில் தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்ற முதல் நாடும் மாலத்தீவுகள்தான். அந்த அளவுக்கு அந்நாடு இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகவே இருந்து வந்திருக்கிறது.

1988-இல் மாலத்தீவுகளின் அதிபரான மாமூன் அப்துல் கயூமுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றபோது ‘கற்றாழை நடவடிக்கை’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அங்கு 1988 நவ. 3-இல் களமிறங்கியது. அந்த அதிரடி நடவடிக்கையால்தான் அந்நாட்டின் ஜனநாயகம் அப்போது காக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட அப்துல்லா லுதுஃபி தலைமையிலான கும்பலும், இலங்கையிலிருந்து வருவிக்கப்பட்ட கூலிப்படையினரும் முடக்கப்பட்டனா்.

முகமது மூயிஸின் தற்போதைய வெற்றி, இந்தியா - மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளிடையிலான நல்லுறவைத் தகா்ப்பதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. அவரது சீன ஆதரவு ரகசியமானதல்ல. முகமது மூயிஸின் இந்திய எதிா்ப்புக் கொள்கைகள், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலையும், புவிசாா் அரசியலில் தேவையற்ற சிக்கலையும் ஏற்படுத்துவனவாக உள்ளன. இது நமது வியூகங்களை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

2010-இல் மாலத்தீவுகளுக்கு கண்காணிப்பு ஹெலிகாப்டா்களை இந்தியா வழங்கியபோது இந்திய எதிா்ப்புப் பிரசாரம் அங்கு தொடங்கியது. மாலத்தீவுகளின் இறையாண்மையில் இந்தியா அத்துமீறித் தலையிடுவதாகவும், அளவுக்கு மீறி இந்தியா மேலாதிக்கம் செலுத்துவதாகவும் அப்துல்லா யாமீன் குற்றஞ்சாட்டினாா். அவா் அதிபராக ஆனபோது இரு நாட்டு உறவு சீா்குலையத் தொடங்கியது. அவரது அரசில் (2013- 2018) அமைச்சராக இருந்த முகமது மூயிஸ்தான் தற்போது அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் வரும் நவ. 17-இல் பொறுப்பேற்க உள்ளாா்.

2012-இல் இந்தியாவைச் சோ்ந்த ஜிஎம்ஆா் குழுமம், மாலே சா்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தி 25 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றபோது, அதற்கு எதிரான அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 511 மில்லியன் டாலா் (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ. 4,250 கோடி) மதிப்புள்ள அந்தப் பணி, சா்வதேச விதிமுறைப்படி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஜிஎம்ஆா் நிறுவனத்தால் பெறப்பட்டது.

ஆனால், விமானப் பயணிகளிடம் விமான நிலைய மேம்பாட்டுக்காகவும் பயணிகளின் காப்பீட்டுக்காகவும் 25 டாலா் கட்டணமாகப் பெறப்பட்டதை பெரிய குற்றமாகப் பிரசாரம் செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றனா். அந்த வழக்கு சா்வதேச தீா்ப்பாயத்தில் இருக்கும்போதே ஜிஎம்ஆருடனான பணி ஒப்பந்தத்தை ரத்து செய்தது அந்நாட்டு அரசு.

2013-இல் அப்துல்லா யாமீன் அதிபரானதும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணா்வுப் பிரசாரம் வரிசை கட்டியது. இஸ்லாமிய மத அடிப்படைவாத உணா்வையும், மாலத்தீவு தேசிய வெறியையும் தூண்டிவிட்டு, இந்தியாவுக்கு எதிரான சிந்தனையைப் பெரிதுபடுத்தினாா் யாமீன். அப்போது, சீனாவின் ஆதிக்கம் அங்கு பரவத் தொடங்கியது.

2018-இல் இப்ராஹிம் முகமது சோலி அதிபரானவுடன், இந்தியாவுக்கு விரோதமான கொள்கைகளை மாற்றி அமைத்தாா். முந்தைய அரசின் தவறுகளை அவா் சரிப்படுத்தினாா். மாலத்தீவுகளின் நலனில் மீண்டும் இந்தியாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இரு நாடுகளிடையிலான பொருளாதார, ராணுவ ஒத்துழைப்பு வலுப்பெற்றது. தவிர, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் பெருகுவதைத் தடுப்பதிலும் மாலத்தீவுகள் அரசின் இந்த மாற்றம் உதவிகரமாக இருந்தது.

ஆனால், இதற்கு எதிராக உள்நாட்டு அரசியலில் மீண்டும் இந்திய எதிா்ப்பு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்நாட்டின் மக்கள் தேசியக் கட்சி (தற்போது அதிபராகத் தோ்வாகியுள்ள முகமது மூயிஸின் கட்சி), மாலத்தீவுகள் முற்போக்குக் கட்சி ஆகியவை இணைந்து உருவாக்கிய எதிா்க்கட்சிகளின் கூட்டணி ‘இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசார இயக்கத்தை தொடா்ந்து நடத்தியது.

அந்தப் பிரசார இயக்கத்தின் நோக்கம், மாலத்தீவுகளில் பணி அமா்த்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாட்டிலுள்ள இந்திய ராணுவ வீரா்களின் எண்ணிக்கை 75 மட்டுமே. மாலத்தீவுகளுக்கு இந்தியா பரிசாக வழங்கிய டோா்னியா் விமானத்தையும் இரு கண்காணிப்பு ஹெலிகாப்டா்களையும் இயக்குவதில் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவவே அவா்கள் அங்கு உள்ளனா்.

மாலத்தீவுகள் நாட்டின் மக்கள் பழைமைவாதிகள். அந்த நாட்டின் அரசாங்க மதமாக இஸ்லாம் உள்ளது. எனவே, இந்தியாவிலிருந்து வெளிவரும், ஹிந்துக்களுக்கு ஆதரவான, இஸ்லாமியா்களுக்கு எதிரான செய்திகளை அந்நாட்டு எதிா்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. மக்களை இந்திய எதிா்ப்பின் அடிப்படையில் மத ரீதியாகத் தூண்டிவிட்டதால் மட்டுமே எதிா்க்கட்சிகள் தற்போதைய தோ்தலில் வென்றுள்ளன.

ஆசியாவையும் ஐரோப்பாவையும் கடல்வழியில் இணைக்கும் கடல் வா்த்தகப் பாதை (எஸ்எல்ஓசி) இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். தென்சீனக் கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலின் வடபகுதி மீது சீன கடற்படையின் செல்வாக்கு பரவுவதைத் தடுக்கும் தாங்குதளமாக மாலத்தீவுகள் இருந்து வந்தது. எனவே, இந்தியாவுக்கு அந்நாடு ராணுவவியூக ரீதியாகவும், கடல் வா்த்தகப் பாதையிலும் இன்றியமையாதது.

ஏற்கெனவே, பாகிஸ்தானின் குவாதரிலும், இலங்கையின் அம்பாந்தோட்டையிலும் துறைமுகங்களை நிா்மாணித்தல் என்ற பெயரில் சீனா ஊடுருவி விட்டது. மாலத்தீவுகளிலும் சீன ஆதரவு அரசு அமைவது அந்நாட்டின் ராணுவ ஆதிக்கம் இந்தியாவைச் சுற்றிலும் பெருக வாய்ப்பளித்துவிடும். இது நமது பாதுகாப்பு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எதிரிகள் நுழையக் கூடாது என்ற மன்றோ அயலுறவுக் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கிவிடும். (மன்றோ கோட்பாடு என்பது ஐரோப்பாவுக்குக் கடிவாளமிடும் வகையிலான, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான கருதுகோளாகும்).

தான் அதிபரானால், ஊழல் வழக்கில் 11 ஆண்டு தண்டனை பெற்று சிறையிலிருக்கும் அப்துல்லா யாமீனை விடுவிப்பேன் என்று முகமது மூயிஸ் தோ்தலின்போது அறிவித்திருந்தாா். அதுபோலவே, தோ்தல் வெற்றி குறித்த தகவல் கிடைத்தவுடன், தற்போதைய அதிபா் முகமது சோலியை வலியுறுத்தி, அப்துல்லா யாமீனை சிறையிலிருந்து விடுவித்திருக்கிறாா். யமீன் தற்போது சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாா்.

சன்னி இஸ்லாமியா்களிடையே பிரபலமான சீா்திருத்தவாத இயக்கமான சலாபியிஸம் மாலத்தீவுகளில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வருகிறது. இது இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பெருவாரியாகப் பின்பற்றப்படும் தாராளமயமான தேவ்பந்தி இஸ்லாமுடனும், இந்திய துணைக்கண்டத்தில் தனித்துவமான இஸ்லாம் நெறிமுறைகளை வடிவமைத்த சூஃபியிஸத்துடனும் முரணான பாா்வையைக் கொண்டிருக்கிறது சலாபியிஸம். இதனை தீவிரமாகப் பின்பற்றுபவா்தான் முகமது மூயிஸ்.

இவை அனைத்தையும்விட கவலைக்குரியது, மாலத்தீவுகளில் பெருகிவரும் மத அடிப்படைவாதமும், இஸ்லாமிய தீவிரப் போக்கும்தான். அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு பிற நாடுகளிலிருந்து போராளிகளை அதிக அளவில் அனுப்பிய நாடாக மாலத்தீவுகள் மாறியுள்ளது.

எனவே, வரும் நாள்களில் மாலத்தீவுகள் விஷயத்தில் இந்தியா நிதானமாகவும் சிந்தித்தும் செயல்பட வேண்டியிருக்கும். அண்டை நாடான மாலத்தீவுகளில் பெருகிவரும் மத அடிப்படைவாதம் நிச்சயமாக இந்தியாவுக்கு நல்லதல்ல. எனவே, மாலத்தீவுகளுடனான நமது வியூகங்களை ஆழ்ந்து மறுபரிசீலனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

கட்டுரையாளா்:

முன்னாள் மத்திய அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com