சிகரெட், குடிப்பழக்கம் இல்லை, ஆரோக்கியமான வாழ்வுமுறையைக் கடைபிடிக்கிறேன் எனக்கெப்படி கேன்சர் வந்தது?

மருத்துவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் கேள்வி இது. இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன தெரியுமா?
சிகரெட், குடிப்பழக்கம் இல்லை, ஆரோக்கியமான வாழ்வுமுறையைக் கடைபிடிக்கிறேன் எனக்கெப்படி கேன்சர் வந்தது?

இந்தக் கேள்வியை தங்களது மருத்துவரிடம் இன்று பல நூறு பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கேன்சர் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட மிக அதிகமாகி விட்டது. நேற்று வரை நம்மோடு நன்றாகப் பேசிப் பழகிக் கொண்டிருப்பார்கள்... திடீரென அவரவர் பணிகளில் மூழ்கிப் போயிருக்கும் தருணத்தில் சில மாதங்களோ, வருடங்களோ கழித்து நமக்கு நன்கு அறிமுகமான ஒரு நபர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டார் என்று செய்தி வந்தால், அதற்கான காரணம் பெரும்பாலும் விபத்து என்று தான் 90 கள் வரை நம்பப்பட்டது. ஆனால் இன்று அதற்கான காரணம் கேன்சராகவும் இருக்கலாம் என மாறியுள்ளது. ஏன் இப்படி ஒரு அபாயகரமான சூழல் நிலவுகிறது? என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

சிகரெட் பழக்கம் கிடையாது, குடிப்பழக்கம் அறவே கிடையாது, நேரம் கெட்ட நேரத்தில் கண்ட கண்ட உணவு வகைகளை விழுங்கி வைக்கும் முறையற்ற உணவுப் பழக்கங்களை கிட்டவே அண்டவிட்டதில்லை, அதிகாலையில் எழுவது, உடலையும், மனதையும் திடமாக வைத்துக் கொள்ள முறையான உடற்பயிற்சிகள் செய்வது, யோகா, பிரணாயாமம், நிறைய காய்கறிகளும், பழங்களும் நிறைந்த உணவுப் பழக்க முறைகள், உடல் எடைக்குத் தக்க குடிநீர்த் தேவையை முறையாகப் பேணுவது என்று மிக மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆனாலும் எனக்கெப்படி கேன்சர் வந்தது டாக்டர்?

அழாக்குறையாகவோ, விசும்பி அழுது கொண்டோ பயத்துடன் இன்று பலரால் இந்தக் கேள்வி அவரவர் மருத்துவரிடம்  இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அனுதினமும் கேட்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை. மருத்துவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் கேள்வி இது. இந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன தெரியுமா?

நமது தியேட்டர் விளம்பரங்களில் காட்டப்படுவது போல நிகோடினால் மட்டுமே கேன்சர் வருவதில்லை. கேன்சர் வருவதற்கு இன்று பல காரணங்களை மக்களாகிய நாமே உருவாக்கிக் கொண்டு விட்டோம் என்பதே நிஜம். அவை என்னென்னெ தெரியுமா?

  • பூச்சிக் கொல்லிகள்
  • உணவைப் பதப்படுத்த சேர்க்கப் படும் பிரிஸர்வேட்டிவ்கள்
  • நிறமூட்டிகள்
  • சுகாதாரமின்மை
  • காய்கறிகள் மற்றும் பழங்களை ஃப்ரெஷ் ஆக வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் டீகிரீனிங் ஏஜண்ட்டுகள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பவர்களுக்கும் கூட கேன்சர் ஏன் வருகிறது? என்றால் இவற்றால் தான் என்கிறார்கள் மருத்துவர்களும், சூழலியல் நிபுணர்களும். எப்படி என்று பார்ப்போம்.

பூச்சிக் கொல்லிகள்:

சமீபத்தில் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற நபர் ஒருவர் ஒரு கூடை நிறைய ஃப்ரெஷ் ஆன பழங்கள் மற்றும் காய்கறிகளை அவருக்கு அன்புப் பரிசாக வழங்கி இருக்கிறார். டாக்டர் இதெல்லாம் எதற்கு? வேண்டாம், நீங்கள் நோயிலிருந்து மீண்டதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று கூறி இருக்கிறார். ஆனால் பரிசளித்தவரோ; “இல்லை டாக்டர் நீங்கள் இதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது  நீங்கள் வழக்கமாக மார்க்கெட் போனால் வாங்கிக் கொள்ளக்கூடிய சாதாரணக் காய்கற்களும், பழங்களும் அல்ல; இவற்றை நான் எனது தோட்டத்தில் எனது கைகளால் எந்த விதமான செயற்கை உரங்களும் இடாமல், ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்தி விளைவித்தேன். இதனால் எந்தத் தீங்கும் நேராது. இத்தகைய காய்கறிகள், பழங்களை நீங்கள் மார்கெட்டில் பெற முடியாது. என்று கூறினாராம். அப்படியானால் அது நிச்சயம் மிகச்சிறந்த நன்றியறிவித்தல் தான் இல்லையா?

நமது பாரம்பரிய விவசாயிகளுக்கு எந்த உரத்தை எந்த சதவிகிதத்தில் பயிர்களில் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்தக் கூடாது என்பது என்பது மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் மாறி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப மக்களின் தேவைகளைச் சமாளிக்க அதீதமான உற்பத்தி விகிதாச்சாரம் தேவைப்படுகிறது. அதனால் தான் இந்தியாவில் உலகின் பிற எந்த நாடுகளிலும் தடை செய்யப்பட்ட உரங்களையும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் கூட அரசு அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதைத் தவிர்க்க மேலே உள்ள பத்தியில் அவர் தெரிவித்த படி அவரவர் வீட்டு உபயோகத்துக்கு என அவரவரே உற்பத்தி செய்து கொள்ளும் நிலை வர வேண்டும். இல்லையேல் மருத்துவரிடம் சென்று; எனக்கெப்படி கேன்சர் வந்தது? என்று கேட்பவர்களில் நாமும் ஒருவராகிப் போகும் சாத்தியக் கூறுகள் அதிகமே!

1970 களில் கேரளாவில் 4000 பேருக்கும் அதிகமான மக்கள் இறக்க காரணமான எண்டோசல்ஃபான் எனும் பூச்சி மருந்து முந்திரியில் அபிரிமிதமான விளைச்சலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. விளைச்சலை அள்ளிக்கொடுத்த எண்டோ சல்ஃபான் மனித உயிர்களிடம் இரக்கம் காட்டக் கூடியதல்ல. 4000 க்கும் அதிகமானோரை அது பலி கொண்டது. இதனால் உலகம் முழுதும் அது தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளில் ஒன்றாக அறிவிக்கப் பட்டது. ஆனால் இன்றும் இந்தியாவில் இறக்குமதியாகும் பல்வேறு விதமான பூச்சி மருந்துகளில் எண்டோசல்ஃபான் இருப்பதாக ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இப்போதும் பல்வேறு விதமான காய்கறிகள் மற்றும் பழங்களில் எண்டோ சல்ஃபான் மிச்சங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போதும் மேக்ரோசெபாலி, புத்திக் கூர்மை குறைபாடு, கேன்சர் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கித் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் இது இப்போதும் முற்றாகத் தடை செய்ய முடியாத ஒன்றாக நீடிப்பதும் பெருகி வரும் கேன்சர் நோயளிகளுக்கான காரணமாகக் கருதப் படுகிறது.

பிரிஸர்வேட்டிவ்கள்:

பிரஸர்வேட்டிவ்களில் இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் கிளாஸ் 1 வகை பிரிஸர்வேட்டிவ்கள் உப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களை மக்கள் உபயோகத்துக்காக நீண்ட காலம் கெடாமல் வைத்துப் பாதுகாக்க சேர்க்கப் படக்கூடியவை. இவற்றை தேவையான போது, தேவைப்படும் அளவுகளில் எடுத்துக் கொள்வதால் பாதிப்புகள் வராது என்று கூறப்படுகிறது. ஆனால் உணவுத் தொழில்நுட்பம் வளர வளர அடுத்தாக கிளாஸ் 2 பிரிஸர்வேட்டிவ்கள் வந்தன. இவை அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்ல நாம் விரும்பும் அனைத்து வகை உணவுப் பொருட்களையும் கூட அதாவது உதாரணத்துக்கு பால், சிக்கன், மட்டன், மீன், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கூட  வருடக் கணக்காக கெட்டுப் போகாமல் பயன்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில் இந்த வகை கிளாஸ் 2 பிரிஸர்வேட்டிவ்கள் உணவுப் பொருட்களை வேண்டுமானால் கெடாமல் பாதுகாக்கின்றனவே தவிர அவற்றை உட்கொள்வோருக்கு ஆரோக்கிய ரீதியாக மிகப் பெறும் உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தி வருவது பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

நிறமூட்டிகள்:

உணவுப் பொருட்களில் நாம் பயன்படுத்தும் நிறமூட்டிகள் கூட அளவுக்கு மிஞ்சும் போது கேன்சர் ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக மாறி விடுகிறதாம். இயற்கை நிறமூட்டிகளான மாதுளம் பழ ஜூஸ், பீட்ரூட், கீரைப்பொடி, கேரட் ஜூஸ், மஞ்சள் தூள், கோக்கோ பவுடர், புளூபெர்ரி ஜூஸ் உள்ளிட்டவை வீடுகள் மற்றும் உணவுத் தொழிற்சாலைகளில் தயாராகும் ரெடி டி ஈட் வகை உணவுப் பொருட்களில் நிறமூட்டப் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றின் ஆயுள் குறைவு ஆனால் இவை உணவுப் பொருட்களின் கலோரி ஆற்றலை அதிகப்படுத்தக் கூடியவையும் கூட என்பதால் இவற்றை உடனடியாக உட்கொள்ளுதலே நன்று.

இவை தவிர ரெட் 40, புளூ 1 & எல்லோ 5 என்பவை பொதுவாக தற்போது உணவுத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் பட்டு வரும் பிற நிறமூட்டிகளென கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிறமூட்டிகள் நாட்பட்ட உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கக் கூடியவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் மசித்த கீரை உண்ணும் போது கீரையின் பச்சை நிறம் தானாகே நீங்கள் விரும்பும் நிறத்தை அதற்கு அளித்து விடும். ஆனால் அதே கீரை கிரேவியை நீங்கள் வெங்காயத்தில் தயாரித்து அதற்கு பச்சை நிறமூட்ட நிறமூட்டியைப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? இதே வழிமுறைக் தான் இப்போது பல உணவுத் தயாரிப்பு முறைகளில் பின்பற்றப் படுகிறது. இதனால் மனிதனின் ஆரோக்கியத்துக்கு எதிராக வரிசை கட்டி நிற்கும் உடல்நலக் கோளாறுகள் எண்ணிக்கையிலடங்காதவை எனில் நம்ப முடிகிறதா?!

சில உதாரணங்களைப் பார்த்தால் நீங்கள் மூர்ச்சையாகி விடக்கூடும்... நிறமூட்டிகள் என்ற பெயரில் இவர்கள் செய்வதெல்லாம் பச்சைக் கலப்படம் தானே தவிர வேறில்லை. பாலில் சாக்பீஸ் பவுடர் பயன்படுத்துகிறார்களாம். மிளகாய்ப் பொடியில் வைக்கோல் தூசு, மஞ்சள் பொடியில் அனுமதி மறுக்கப்பட்ட சாயங்கள், டீத்தூளில் கரித்தூள், பச்சை மிளகாய் மற்றும் பச்சைப் பட்டாணி வகையறாக்களை அடர் பச்சை நிறத்தில் ஃப்ரெஷ் ஆகக் காட்ட மாலசைட் கிரீன் எனும் அபாயகரமான நிறமூட்டி( இது கேன்சர் உண்டாக்கும் காரணிகளில் மிகத் தீவிரமானதும் கூட) மேலும் ஆப்பிளை ஃப்ரெஷ் மற்றும் பள பளப்பாகக் காட்ட வேக்ஸ் கோட்டிங் என எந்தெந்த முறைகளில் எல்லாம் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் விசத்தைக் கலக்க முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் ரசாயனக் கலப்புகள் நிறைந்த பண்டங்களே இன்று நமக்கு நுகர்பொருளாகக் கிடைக்கின்றன.

சுகாதாரமின்மை:

தெருவோர உணவகங்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கத்தில் மிகச் சிறந்த இடமுண்டு. ஆனால் இந்த வகை உணவகங்களில் சுகாதாரம் என்ற விசயம் பெரும்பாலும் மிகப்பெரிய குறையாக இருப்பதால் அதனால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் கேன்சரைக் காட்டிலும் வெகு சீக்கிரத்தில் உயிரைப் பறித்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் கொண்டவை. இவ்வகை உணவுகளில் மைக்ரோ ஆர்கானிஸம் என்று சொல்லப்படக் கூடிய நுண்ணுயிர் தொற்றுகள் மிக அதிகம். இவற்றால்... டைபாய்டு, பாட்டுலிஸம், அமீபியாஸிஸ், உள்ளிட்ட நோய்கள் வெகு எளிதாகத் தாக்குகின்றன. அது மட்டுமல்ல தெருவோரங்களில் திறந்திருக்கும் உணவுப் பண்டங்களில் கலந்து விடும் அபாயம் கொண்ட விசத்தன்மைகளைப் பற்றி கேள்விப்பட்டால் அதிர்ந்து போய் விடுவீர்கள். வாகனப் புகையிலிருந்து வெளிவரும் இரசாயனங்கள், கார்பன் டை ஆக்ஸைடு, முதல் காற்று மாசுபாட்டுக்கு காரணமான அனைத்து விதமான கடுமையான வேதிப்பொருட்களும் இப்போது தெருவோர உனவகங்களில் திறந்திருக்கும் உணவுப் பண்டங்களின் மீது ஒரு ஆடை போலப் படிந்து மூடிக் கொள்கிறது. காய்கறிகள், பழங்கள் என்றால் கூட நன்கு கழுவி விட்டு தோலை நறுக்கி விட்டு உண்ணலாம். ஆனால் உடனே உண்ணக்கூடிய இனிப்பு வகைகள், பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, கலந்த சாதங்கள் உள்ளிட்டவை எனில் வேறு வழியே இல்லை அந்த உணவுப் பொருட்களோடு அவற்றில் கலந்த விசமும் அப்படியே நேரடியாக வயிற்றுக்குள் தான் செல்லும். இதில் H. Pylori என்பது கேஸ்ட்ரிக் கேன்சர் வரச் செய்யும் காரணிகளில் முதன்மையானது என்பது நம்மில் எத்தைனை பேருக்குத் தெரியும்? ஆகவே தெருவோர உணவகங்கள் மட்டுமல்ல எந்த உணவகமாக இருந்தாலும் சரி மனித உயிர்களைப் பலி கேட்கும் வேதிப் பொருட்களின் ஊடுருவல் அவற்றில் இருப்பதாகத் தெரிந்தால் தயங்காமல் அந்தக் கடைகளுக்கு அரசு சீல் வைத்து தடை செய்து விடலாம். அதை விட முக்கியம் இதைக் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பரவலாக ஏற்படச் செய்வது.

காய்கறிகள் மற்றும் பழங்களை ஃப்ரெஷ் ஆக வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் டீகிரீனிங் ஏஜண்ட்டுகள்:

சிக்கன் நூடுல்ஸ், வெஜ் நூடுல்ஸ், மஸ்ரூம் நூடுல்ஸ், பீட்ஸாவில் வெஜ் பீட்ஸா, கார்ன் பட்டர் பீட்ஸா, சூப் வகைகளில் பல்வேறு வகைகள் இப்படி எல்லாவற்றிலும் எல்லா நேரங்களிலும் அதாவது சீஸன் இருந்தாலும் இல்லா விட்டாலும் இப்போது எல்லா மாதங்களிலும் எல்லா விதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கக் கூடிய விதமான தன்மை நிலவுகிறது. இதில் பெருமளவு உதவி செய்பவை டிகிரீனிங் ஏஜண்ட்ட்டுகளே. இவை ஃப்ரெஷ் காய்கறிகள் மற்றும் பழங்களை அவற்றின் ஈரப்பதம் உலர்ந்த பின்னும் கூட அதே ஃப்ரெஷ் தன்மையுடன் இருக்கும் படியான தோற்றத்தில் வைத்திருக்க உதவுகின்றன. இவை வெறுமே பார்வைக்குத் தான் அப்படித் தோற்றமளிக்கக் கூடுமே தவிர சுவையில் நிச்சயம் வேறுபாடு தெரியும். ஆனால் முதன்முறையாக உணவைப் பார்வையிட்டு அதை தேர்ந்தெடுக்க இந்த வெளிப்புறத் தோற்றம் போதுமே! நுகர்வோரை வாங்கி உண்ணச் செய்யும் தோற்றத்தை தர பயன்படுத்தப் படும் இந்த டிகிரீனிங் ஏஜண்டுகளால் ஏற்படும் பல்வேறு உபாதைகளை கூகுள் செய்து பார்த்தீர்களானால் அதிர்ந்து விடுவீர்கள்.

ஒருவருக்கு கேன்சரோ அல்லது வேறெந்த உயிர் கொல்லி நோய்களாலோ பாதிப்பு வர இப்படி இத்தனை விதமான காரணங்களும் இருக்கின்றன. இப்போது நம் முன் இருக்கும் ஒரே தீர்வு நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் குறித்த தெளிவான விழிப்புணர்வு அதாவது நுகர்பொருள் நுண்ணறிவு. அந்த விழிப்புணர்வை பெருக்கிக் கொண்டு அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலக்கப் படும் விசத்தன்மையை குறைத்துக் கொண்டே வந்தால் போதும் நாளடைவில் நோய்களற்ற அடுத்த தலைமுறையை உருவாக்க உதவியவர்களாவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com