இந்திய அரசியல் அமைப்புச் சட்டச் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டுப் பிறந்தநாள் விழாவில், விளையாட்டுச் சங்கங்களின் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஜாதிகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்லாது பாலினப் பாகுபாட்டினால் ஒதுக்கப்பட்ட பெண்களின் சமத்துவத்திற்காகவும் போராடிய அண்ணல் அம்பேத்கர், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி இந்தியாவின் வலிமையான மக்களாட்சித் தத்துவத்திற்கு அடிகோலியவர் என்பது அனைவருக்கும் தெரியும். விளையாட்டுத் துறையில் அவரின் பங்கு என்ன என்கிற வினா எழுவது இயல்பே.
பரோடா மன்னரின் கல்வி உதவித் தொகை காரணமாக நியூயார்க்கில் முதுகலைப் பட்டத்தை 1915ல் பெற்ற அம்பேத்கர் 1917ல் முனைவர் பட்டத்தையும் பெற்றுச் சட்டம் பயில்வதற்காக இலண்டனுக்குச் சென்றார். ஆனால் பரோடா மன்னரின் உதவித் தொகை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக இந்தியாவிற்குத் திரும்பி பரோடா மன்னரின் அலுவலகத்தில் இராணுவச் செயலாளராகப் பணியில் சேர்ந்தார். எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் தீண்டாமைத் தாக்குதல்களாலும், தங்குவதற்கு வீடோ விடுதியோ கிடைக்காத காரணத்தாலும் தனது வேலையிலிருந்து விலகி வீடு திரும்ப வேண்டிய சூழலை அம்பேத்கர் சந்தித்தார்.
அதன் பிறகு பம்பாய் சைடன்ஹாம் கல்லூரியில் பொருளதாரப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பரோடா மன்னரின் அலுவலகப் பணியாளர்கள் அம்பேத்கரைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அவருக்கு வழங்கப்பட்டது கல்வி உதவித் தொகை அல்ல என்றும் கல்விக் கடன் என்றும் அந்தக் கடனைத் திருப்பச் செலுத்த வேண்டும் என்றும் அம்பேத்கரிடம் தகவல் தெரிவிக்கவே அவர்கள் வந்திருந்தனர். ஆனால் அந்தக் கல்லூரி முழுவதும் தேடியும் அம்பேத்கர் கிடைக்கவில்லை. அந்தக் கல்லூரியின் விளையாட்டுத் திடலில் ஒரு சிறுவிழாவில் அம்பேத்கர் பேசிக் கொண்டிருந்தபோது அவரை நெருங்கினர், அப்போது அம்பேத்கர் பேசிக் கொண்டிருந்தார்.
“இதோ என் பக்கத்தில் இருக்கும் பி.பாலு என்பவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து நாட்டிற்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த வேகப் பந்து வீச்சாளர். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் திறமையும் அறிவுக்கூர்மையும் வலிமையும் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க வந்த வெற்றி வீரர் இவர். பம்பாய் மாநகராட்சியில் சிறப்பு உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும் என்ற என் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தற்போது இவர் பம்பாய் மாநகராட்சியில் நியமன கவுன்சிலராகப் பதவியில் உள்ளார். இவரைப் பாராட்டுவதற்காக இங்குக் கூடியிருக்கிறோம்.”
அம்பேத்கரின் பாராட்டுரை முற்றுப்பெறுவதற்கு முன்னராகவே பரோடா மன்னர் அலுவலகப் பணியாளர்கள் அம்பேத்கரிடம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தினர்.
அவர்களின் மன்றாடி வேண்டுகோள் வைத்த அம்பேத்கர் அதன் பிறகு லண்டனுக்குச் சென்று சட்டம் படித்தது தனிக்கதை.
அம்பேத்கருக்கும் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு என்பது தற்போது புரிகிறது அல்லவா? அன்றைக்கு பி.பாலு என்பவருக்குப் பம்பாய் மாநகராட்சியில் சிறப்பு நியமனப் பதவியைப் பெற வைத்த அம்பேத்கரின் செயல்திட்டத்தை முன்மாதிரியாக வைத்துத்தான் இன்று சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு மாநிலங்களவை நியமனப் பதவி வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளலாம்.
இந்தியா விடுதலை பெற்றதும் ஆங்கிலேய முதலாளிகள் வசமிருந்த விளையாட்டுச் சங்கங்கள் அப்படியே உயர்ஜாதியினரிடம் வழங்கப்பட்டு விட்டன. எனவேதான் தேசிய, மாநில, மாவட்ட விளையாட்டுச் சங்கங்கள் தற்போதும் உயர்ஜாதியினரிடம் மட்டுமே உள்ளது. அது மட்டுமல்லாது விளையாட்டு வீரர் அல்லாதவர்களும் விளையாட்டுச் சங்கங்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என்றால் ஆட்டோ ஓட்டுனராக இருக்க வேண்டும். ஆசிரியர் சங்கம் என்றால் ஆசிரியராக இருக்க வேண்டும். வழக்கறிஞர் சங்கம் என்றால் வழக்கறிஞராக இருக்க வேண்டும். பத்திரிகையாளர் சங்கம் என்றால் பத்திரிகையாளராக இருக்க வேண்டும். ஆனால் விளையாட்டுச் சங்கம் என்றால் விளையாட்டு வீரராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது எப்படி நியாயமாகும்? இதனால் தான் இந்தியாவின் ஒலிம்பிக் கனவுகள் கானால் நீராகிப் போகின்றன.
இந்தியாவில் தற்போது சாதனையாளர்களாகத் திகழும் எந்த விளையாட்டு வீரரும் எந்த விளையாட்டுச் சங்கங்களின் உதவியினாலும் முன்னேறியவர் அல்லர். பெற்றோரின் உழைப்பு, பணித்தியாகம், கடன் சுமை ஆகிய துன்பங்களில் உழன்றுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் உருவாகுகிறார். கல்வி நிறுவனங்களில் விளையாட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் வாங்கப்படுவதில்லை. மாணவர்களும் அரசாங்கமும் விளையாட்டுத் துறைக்காக வழங்கும் பணம் யாவும் போலியாகச் செலவினப் பட்டியலில் காட்டப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டுக் கிராமங்கள் தோறும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் வழங்கப்படும் விளையாட்டு நிதியாகவும் பொய்யாகவே கணக்குக் காட்டப்பட்டுச் சுருட்டப்படுகிறது.
பொது இடங்களில் விளையாட்டுத் திடல்கள் யாவும் காணாமல் போகின்றன. விளையாட்டுச் சாதனையாளர்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்தே உருவாக முடியும். ஆனால் எந்த விளையாட்டுச் சங்கங்களும் கிராமங்களுக்குச் சென்று விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில்லை.
அரசியல், ஜாதி, பரிந்துரை, பணம் இவை யாவுமே விளையாட்டு வீரர்களைத் தேடுவதற்கான கருவிகளாகப் பயன்படுவதற்குக் காரணம் விளையாட்டுச் சங்கங்களில் அதிகாரத்தில் இருப்பவர்களின் பொறுப்பற்றதனமே ஆகும்.
விளையாட்டுச் சங்கப் பயிலக அங்கீகாரம், போட்டிகள் நடத்தும் அங்கீகாரம், பயிற்சிகள் நடத்த ஒப்புதல், வீரர்களுக்குப் பாராட்டு, ஊக்குவிப்பு, உதவி போன்ற அனைத்துச் செயல்பாடுகளிலும் தற்போதைய விளையாட்டுச் சங்கப் பொறுப்பாளர்கள் பெண்களையும் தாழ்த்தப்பட்டோரையும் சிறுமைப்படுத்தியே வருகின்றனர்.
தேசிய, மாநில, மாவட்ட விளையாட்டுச் சங்கங்களின் அதிகாரப் பதவிகளில் தற்போது 1சதவிகிதம் கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், பெண்களும் பதவிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்குப் பின்வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன.
தற்போது பதவிகளில் இருப்போருக்கு மேற்படி தேவைகளை உணர்வதற்கான வலியையோ துன்பத்தையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மேற்படி தேவைகள் யாவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் விளையாட்டுச் சங்க அதிகாரப் பதவிகளில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வேண்டும்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த காலக்கட்டத்தில் இத்தைகய முழக்கம் தேவை என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சி. செந்தமிழ் சரவணன்
(மாநிலச் செயலாளர், தமிழ்நாடு பட்டியல் வகுப்பினர் பழங்குடியினர் விளையாட்டுச் சங்கம்)
தொடர்புக்கு - 9976252800
மின்னஞ்சல் - senthamizhsaravanan@gmail.com