Enable Javscript for better performance
Chennai girl stabbed to death near college entrance-|அஸ்வினி!!! ஒருதலைக்காதல் கொலை!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அஸ்வினி!!! ஒரு தலைக் காதல் வன்முறைகளை நியாயப்படுத்தும் சினிமாக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நேரமிது!

    By கார்த்திகா வாசுதேவன்  |   Published On : 09th March 2018 05:33 PM  |   Last Updated : 09th March 2018 05:33 PM  |  அ+அ அ-  |  

    ashvini_murder

     

    கத்தியால் குத்தப்பட்ட அஸ்வினிக்கு எத்தனை கனவுகளிருந்தனவோ? 

    காலையில் கல்லூரிக்குச் சென்ற மகள் பிற்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாள் என்றால் அந்தப் பெண்ணைப் பெற்றவர்களின் கதியை நினைத்துப் பாருங்கள். அவளுடனே அருகமர்ந்து படிக்க வாய்த்த பிற மாணவிகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். சென்னையில் இப்படிப்பட்ட பயங்கரங்கள் இன்று தொடர்கதையாகி வருகின்றன. 

    கொலையின் பின்னணி...

    மதுரவாயலைச் சேந்த மாணவி அஸ்வினிக்கு அழகேசன் என்ற இளைஞரால் முன்பே தொந்திரவு இருந்திருக்கிறது. அழகேசன் கடந்த மாதம் காதல் எனும் பெயரில் மாணவி அஸ்வினிக்கு கட்டாயத் தாலி கட்ட முயன்றிருக்கிறார். அது குறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்திருக்கிறார். அஸ்வினியின் புகாரின் அடிப்படையில் அழகேசன் காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த அழகேசன் இன்று மாணவி அஸ்வினி கல்லூரி முடிந்து வழக்கம் போல கல்லூரியை விட்டு வெளியில் வருகையில் வாசலில் வைத்தே கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார். மாணவி அஸ்வினி கத்தியால் குத்தப்பட்டதும் சம்பவ இடத்திலிருந்தோர் அவரை அவசரகதியில் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் மாணவி அஸ்வினி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர். மாணவியை கத்தியால் குத்தி விட்டு அழகேசனும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமுற்று அந்த இளைஞனை அடித்துத் துவைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது பிடிபட்டுள்ள அந்த இளைஞன் அருகிலுள்ள இஎஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

    கொலை செய்யப்பட்ட அஸ்வினி, அழகேசனின் ஒரு தலைக்காதல் தொல்லையைப் பொறுக்க இயலாமல் மதுரவாயலில் இருந்து ஜாபர்கான் பேட்டையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் அங்கிருந்து தான் கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறார். கொலையாளி அழகேசன் பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த கே.கே நகர் பகுதியில் மாணவி ஒருவர், இளைஞன் ஒருவனால் குத்திக் கொல்லப் பட்ட்அ இச்சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மட்டுமல்ல தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே காதல் என்ற பெயரில் தொடர்ந்து இளம்பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் நடத்தப்பட்டு வரும் இத்தகைய வன்முறைகள் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றன.

    தமிழகத்தில் காதலின் பெயரால் இப்படி வன்முறைகள் நிகழ்த்தபடுவது முதல்முறையல்ல. 

    தொடரும் ஒருதலைக்காதல் கொலைகள்...

    2016 ஆம் ஆண்டில் ஜூன் 24 ஆம் தேதி அன்று நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்வாதி கொலைக்கு காரணமாகவும் இதே ஒருதலைக் காதல் விவகாரம் தான் பேசப்பட்டது. தனது உருவத்தைக் கேலி செய்து காதலை ஏற்க மறுத்ததால் ராம்குமார் எனும் இளைஞன், ஸ்வாதியை ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொன்றான் என்பதே கடைசி வரை உண்மை என காவல்துறை சாதித்தது. முடிவில் ராம்குமாரும் சிறையில் வைத்து தற்கொலை செய்து கொள்ள அந்த வழக்கு அப்படியே முடிந்தது. இன்று வரை ஸ்வாதி கொலை வழக்கு பல்வேறு மர்ம முடிச்சுகளுடனும் விடை தெரியா சந்தேகங்களுடனும் நீடித்தாலும் கொலைக்குக் காரணம் ஒருதலைக் காதல் என்று தான் காவல்துறையால் கூறப்பட்டுள்ளது.

    ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து ஜூன் 27 ஆம் தேதி சேலத்தைச் சேர்ந்த வினுப்ரியா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டார். வினுப்ரியா, தனது காதலை ஏற்க மறுத்ததால் சுரேஷ் எனும் மாணவன் வினுப்ரியாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து முகநூலில் பதிவு செய்ய அதைக் கண்டு மனமுடைந்த வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி. இந்தக் கொலையிலும் ‘ஒரு தலைக் காதல் தான் பிரதானம்.

    அடுத்து, விழுப்புரத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி நவீனாவை, தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி செந்தில் என்ற இளைஞன் வற்புறுத்த, மாணவி நவீனா அதற்கு ஒத்துழைக்காததால் நவீனா மீதும், தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டான் அந்த இளைஞன். இதனால் ஒரு பாவமும் அறியாத அந்தத் தளிர் காதலின் பெயரால் தனது விருப்பமின்றியே ஒரு கொடூரத்துக்குப் பலியானது.

    அதே போல... தொடரும் வெறிச்செயலாக கரூர் மாணவி சோனாலியை, உடன் படித்த மாணவன், தனது ஒரு தலைக் காதலை அந்த மாணவி ஏற்றுக் கொள்ளாததால் மாணவியைக் கல்லூரி வகுப்பறையில் வைத்தே கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    அதோடு முடியவில்லை இத்தகைய கொடூரங்கள்,  தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா என்பவருக்கு மறுநாள் திருமணம் என்ற நிலையில், அவரை சர்ச் வளாகத்தில் வைத்தே சீகன் கோமஸ் என்பவன் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடினான். இதன் பின்னணியும் ஒருதலைக் காதலே!

    திருச்சி மோனிஷா, கோவையில் தன்யா, சென்னையில் சோனியா என்று தொடர்ந்து இளம்பெண்கள் கத்தியால் குத்தப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டதன் பின்புலமாகக் கூறப்பட்டது அதே ஒருதலைக் காதல் விவகாரம் தான்.

    இத்தனை கொடூரங்களையும் தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளின் வாயிலாக பார்த்துக் கொண்டும், அதைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருக்கும் பொதுமக்களின் தீர்க்க முடியாத பிரச்னைகளில் ஒன்றாக இப்போது  ‘பிள்ளை வளர்ப்பும்’ மாறி விட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சிறுவர்களையும், சிறுமிகளையும், இளம்பெண்களையும், இளைஞர்களையும் எப்படி கையாள்வது என்றே புரியாமல் தவிக்கிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். முடிவெடுக்கத் தெரியாத வயதில் பிள்ளைகள் செய்யும் தவறுகளை பக்குவமாக கையாண்டு எவ்வித சேதமும் இன்று அவர்களை அந்தச் சிக்கலில் இருந்து மீட்பது எப்படி என்ற கவலை இன்று 100 ல் 80 பெற்றோருக்கு உண்டு.

    நிலைமை அப்படி இருக்க, இன்றைய பெற்றோர்களை வதைக்கும் காரணிகளில் மேலும் ஒன்றாக இப்போது ஒருதலைக் காதலும் அதனால் விஸ்வரூபமெடுக்கும் கொடூரக் கொலைகளும் கூட இணைந்து கொண்டமை துரதிருஷ்ட வசமானவை. 

    இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமெனில் இளைஞர்களும், இளம்பெண்களும் இருக்கும் வீடுகளில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமான உரையாடல்களில் தொய்வு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்துப் பெற்றோரின் கடமை. அதுமட்டுமல்ல வளர்ந்த பிள்ளைகள் தானே, இனி அவர்களது விஷயங்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்று மிகுந்த தன்னம்பிக்கையோடு பிள்ளைகளை கட்டுப்பாடற்ற அதிகப்படி சுதந்திரத்துக்கோ அல்லது தலைமுறை இடைவெளியின் காரணமாக நிகழும் தன்னியல்பான தூரத்திற்கோ பழக்கி விடாதீர்கள். அம்மாதிரியான சூழல்களில் தான் மேற்கண்ட வெறிச்செயல்கள் நிகழ் அதிக சாத்தியங்கள் இருக்கின்றன. 

    எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஒரு தலைக் காதல் விவகாரத்தில் கொலை போன்ற கொடூரங்கள் நிகழ நமது சினிமாக்களும் முக்கிய காரணங்களாகின்றன என்பதை மறுக்க முடியாது. ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணின் மீது விருப்பமில்லை, காதல் இல்லையென்றால் அந்தச் சூழலை எப்படி கெளரமாக அணுக வேண்டும் என இன்றைய இளைஞர்களுக்கு கற்றுத்தரும் சினிமாக்களை உருவாக்குங்கள். முகத்துக்கு நேராக ஒரு பெண் நோ என்று சொன்னால் அடுத்து அவளை வெட்டச் சொல்வதும், குத்தச் சொல்வதும், பெட்ரோல் ஊற்று எரிக்கச் சொல்வதுமாக சினிமாக்கள் எடுக்கப் பட்டால், சினிமாவை சினிமாவாகப் பார்க்கத் தெரியாத இந்தக் கால இளைஞர், இளம்பெண்களை நாம் குற்றம் சொல்ல வாய்ப்பில்லை.

    தயவு செய்து காதலின் பேரால் இனியொரு கொடூரக் கொலை நிகழ்த்தப் பட வேண்டாம். 

    அதற்கான பொறுப்புணர்வை, புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை பெற்றோர், ஆசிரியர், ஊடகத்தினர், சினிமா படைப்பாளிகள் என நம் அனைவருக்கும் உண்டு!


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp