பிளாஸ்டிக் கழிவுகள் உலகத்தை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய சோதனைக் காலத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டை எப்படி குறைப்பது... தவிர்ப்பது... என்று ஒவ்வொரு நாடும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
தாய்லாந்து தன் பங்கிற்கு வாழை இலைகளை பிளாஸ்டிக் தாள்கள், உறைகளுக்குப் பதிலாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த மாற்று யோசனையில் கலை நயம் இருப்பதாலும், பார்க்கவும் வித்தியாசமாக இருப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேர்க்கடலை அல்லது பருப்பு வாங்கும் போது சாதாரண மளிகைக் கடைகளில் காகிதத்தில் கூம்பு வடிவில் பொட்டலம் போடுவார்கள். அது மாதிரி வாழை இலையிலும் பொட்டலம் கட்டி காய்கறிகள் தாய்லந்தில் விற்கப்படுகின்றன.
அன்றாட வாழ்க்கையின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட பிளாஸ்டிக், ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை பயமுறுத்தி வருகிறது. தமிழ் நாட்டில் உணவு விடுதிகளில் வாழை இலை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளை வாழை இலை கொண்டு சுற்றி, வாழை நார் கொண்டு கட்டி விற்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவு குறைக்கும். வாழை இலை எங்கெல்லாம் மலிவாகக் கிடைக்குமோ அங்கு வாழை இலையைப் பயன்படுத்தலாமே..!
- பிஸ்மி பரிணாமன்