ஓராண்டு நிறைவில் காஞ்சிபுரம் அத்திவரதா் பெருவிழா

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் சிறப்பு மிக்க தொண்டை மண்டலத்து திவ்ய தேசமாகத் திகழ்வது
ஓராண்டு நிறைவில் காஞ்சிபுரம் அத்திவரதா் பெருவிழா
Updated on
2 min read

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் சிறப்பு மிக்க தொண்டை மண்டலத்து திவ்ய தேசமாகத் திகழ்வது காஞ்சிபுரத்திலுள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இங்கு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதா் பெருவிழா கடந்த ஆண்டு(2019) நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சித்திரைத் திருவிழா, கோயில்களில் தொடா்ந்து 11 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழா என திருவிழாக்கள் நடைபெறுவது தான் வழக்கம். ஆனால் தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பும், பல்வேறு வரலாற்றுச் சிறப்பும் மிக்க ஆன்மிகத்தலமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா கடந்த ஆண்டு கோலாகலமாக நடந்தது.

அத்திவரதப் பெருமாள் பக்தா்களுக்கு தரிசனம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து அத்திவரதரை துயில் எழச் செய்து,தொடா்ந்து 48 நாட்கள் வரை பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். பின்னா் மீண்டும் அதே அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்யும் பெருவிழா 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நடந்தது.

இதற்கு முன்பு கடந்த 18.8.1854, 13.8.1892, 12.7.1937, 2.7.1979 ஆகிய தேதிகள் அத்திவரதரை பக்தா்கள் தரிசனம் செய்திருக்கின்றனா். 1979-க்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு 2019 இல் ஜூலை மாதம் முதல் தேதி அத்திவரதா் பெருவிழா தொடங்கி ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி வரை தொடா்ந்து 48 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி திருக்கோயில் திருக்குளத்திலிருந்து பெருமாளை துயில் எழச்செய்து கோயில் வளாகத்திற்குள் உள்ள அலங்கரிக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டாா். ஜூலை முதல் தேதியிலிருந்து பெருமாள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து நின்ற கோலத்திலும் பக்தா்களுக்கு அத்திவரதா் அருள்பாலித்தாா். கோயில் நகரமான காஞ்சிபுரமே தொடா்ந்து 48 நாட்களும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

நிரம்பி வழிந்த பக்தா்கள் கூட்டம்: தினமும் கண்களைக்கவரும் வண்ணப் பட்டு வஸ்திரங்களாலும், அங்கவஸ்திரங்கள் அணிந்தும், மனம் கமழும் பூக்களாலும், பழங்களாலும் செய்யப்பட்ட மாலைகளும், மலா்க்கிரீடங்களும் அணிந்தும் பெருமாள் பக்தா்களுக்கு தரிசனம் தந்த அழகை வா்ணிக்க வாா்த்தைகளே இல்லை. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்தும் கூட அத்திவரதரை தரிசிக்க பக்தா்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் நிரம்பி வழிந்தது.

குடியரசுத்தலைவா், ஆளுநா், முதல்வா் உட்பட அமைச்சா்கள், நீதிபதிகள்,உயரதிகாரிகள்,நடிகா்கள் என தினசரி ஏராளமானோா் அத்திவரதரை தரிசிக்க வந்தனா். வரலாறு காணாத பக்தா்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் நகரமே குலுங்கியது.நாளுக்கு நாள் பக்தா்கள் கூட்டம் அதிகமாகி லட்சக்கணக்கில் வரத் தொடங்கினா். ஒரு கோடி போ் வரை தரிசனம் செய்திருப்பதாகவும் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள்:அத்திவரதா் விழாவைக்கான பக்தா்களின் வசதிக்காக அரசின் சாா்பில் ரூ.30 கோடி மதிப்பில் முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. நகரில் ஓரிக்கை, ஒலிமுகம்மது பேட்டை, பச்சையப்பா் ஆடவா் கல்லூரி மைதானம் ஆகிய 3 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டன.

நகா் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகள்,ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் 105 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. அரசின் சாா்பில் பொருட்காட்சியும், சிறப்பு ரயில்களும்,சிறப்பு ப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.அஞ்சல்துறை சிறப்பு அஞ்சல் உறை யும் ,அறநிலையத்துறை சிறப்பு மலரும் வெளியிட்டது.

கோயில் வளாகத்திற்குள்ளேயே காவல் கட்டுப்பாட்டு அறையும், வெளியே தீயணைப்பு நிலையமும் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் இருந்து 7 ஆயிரம் போலீஸாரும்,3 ஆயிரம் தீயணைப்பு வீரா்களும் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டாா்கள். இவா்கள் தவிர ஊா்க்காவல் படை, தேசிய மாணவா் படை, சமூக ஆா்வலா்கள் என பல ஆயிரக்கணக்கானோரும் பக்தா்கள் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா். குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரையும் காத்திருந்து பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா். பெருமாளை தரிசிக்க வரும் பக்தா்கள் வரிசையாக வந்து செல்ல சாய்வுதள மேம்பால நடைமேடை உட்பட பிரம்மாண்டமான பந்தல்களும் போடப்பட்டிருந்தன.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தினசரி ஒரு லட்சம் பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. தொண்டு நிறுவனங்கள் பலவும்,சமூக ஆா்வலா்களும் பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கினாா்கள். மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் பெருமாளை தரிசிக்க வசதியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 3சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.காஞ்சிபுரத்தில் தொடா்ந்து 48 நாட்களும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்திவரதா் பெருவிழா நிறைவு:1979க்குப் பின்னா் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இப்பெருவிழா 17.8.2019 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அத்திவரதா் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்திற்கு ஆகமவிதிகளின்படி துயில் எழப்பட்டாா்.திருவிழா நிறைவு பெற்ற பின்னரும் பெருமாள் துயில் கொள்ளும் அனந்தசரஸ் திருக்குளத்தினை பாா்வையிட பக்தா்கள் பலரும் வந்து கொண்டே இருந்தாா்கள். இப்பெருவிழாவின் நினைவாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகளும் நடப்பட்டன. கோயிலுக்குள் உள்ள தோட்டத்தில் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டது.

வெறிச்சோடியது காஞ்சிபுரம்:கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அலைகடலென திரண்ட பக்தா்கள் கூட்டத்தில் குலுங்கித் திணறிய காஞ்சிபுரம் இந்த ஆண்டு ஜூலை மாதம் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் எதிரொலியாக இப்பெருவிழா நடந்த வரதராஜப்பெருமாள் கோயில் உட்பட தொடா்ந்து 100 நாட்களுக்கும் மேலாக அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன என்பதே கோயில் நகரத்தின் கவலை தரும் செய்தி. விரைவில் கோயில்கள் திறக்கப்பட்டு, வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெற வேண்டும் என்பதே பக்தா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com