தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மூன்று பிள்ளைகளிருந்தும் தெருவில் கழிகிறது வாழ்க்கை

மூன்று பிள்ளைகள் இருந்தும், ஆதரிப்பார் யாருமின்றி வீடு இல்லாமல் தெருவில் வசித்து வருகிறார் கமுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி.  

News image

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி

Updated On :30 செப்டம்பர் 2020, 4:12 pm

பிள்ளைவரம் கேட்டு எத்தனையோ தம்பதிகள் கோயில், குளம், அரச மரம் என சுற்றி பல வேண்டுதல்களை இறைவனிடம் வைக்கின்றனர். அவ்வாறு பல ஆண்டுகள் கழித்துப் பிறக்கும் பிள்ளைகளை தன் உயிருக்கும் மேலாகப் பாசம் வைத்துப் பெற்றோர்கள் வளர்க்கின்றனர்.  

பிள்ளைகள் வளரும்போது அவர்களின் ஆசைகள், தேவைகளை அறிந்தும், அவர்கள் கேட்பதையெல்லாம் இயன்றவரை வாங்கிக் கொடுத்து அவர்களின் ஆசைகளையும் நிறைவேற்றுவதில் பெற்றோர்களுக்குத் தனி மகிழ்ச்சிதான். ஆனால் இன்றைக்கும் பல குடும்பங்களில் வயதான பெற்றோர்களைத் தவிக்கவிடும் பிள்ளைகளை நிறைய காணக் கிடைக்கிறார்கள்.

பிள்ளைகள் பெற்றோர்களைக் கடைசி வரை பாதுகாக்க வேண்டும் என அரசும் நீதிமன்றங்களும் எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், தினசரி தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் பெற்றோர்களைத் தவிக்கவிட்ட பிள்ளைகள், சொத்துக்காக தாய், தந்தையரை விரட்டிவிட்ட பிள்ளைகள் என்ற செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

வயதான பெற்றோர்களைப் பாதுகாக்க வேண்டிய பிள்ளைகளுக்கு வரும் காலத்தில் நமக்கும் இதே நிலை ஏற்படும் என தோன்றாமல் போனது ஏனோ?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அசோகன் மனைவி தமிழ்ச்செல்வி (62). இவரது கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள். திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள்.

தமிழ்ச்செல்விக்கு உடன் பிறந்த சகோதரர்கள் நான்கு பேரில் 3 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் குடியிருக்க வீடு இல்லாமல், உணவுக்கு உறவினர்களை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கரோனா காலத்தில் உறவினர்களும் இவரைக் கைவிட்டதால், கமுதி பி.பி.எஸ். மருத்துவமனை மருத்துவர் உமா மகேஸ்வரி போன்ற தன்னார்வலர்கள் தினசரி மதிய உணவு கிடைக்க வழி செய்தனர். மற்ற இரண்டு வேளைகளும் உறவினர்கள் தற்போது வழங்கி வருகின்றனர்.

இரவு நேரத்தில் தனியார் திருமண மண்டபத்தின் படிக்கட்டில் தூங்கி வருகிறார். பெற்ற மகள், உடன் பிறந்த சகோதரர் இருந்தும் உணவுக்காகவும் தங்குவதற்கு வழியின்றியும் தவித்து வருகிறார்.

இதுபற்றித் தமிழ்ச்செல்வி கூறியதாவது:

"எனது கணவர் இறந்துவிட்டார். நான் வாழ்ந்த வீடு தரைமட்டமாகக் கிடக்கிறது. தங்குவதற்கு இடம் இல்லை. எனது மகள் என்னை சென்னைக்கு அழைக்கிறாள். ஆனால், எனக்கு அங்கு செல்ல மனம் இல்லை. வாழ்நாள் இறுதி வரை இதே இடத்தில் உறவினர்களோடு வாழ்ந்து, இந்த மண்ணிலேயே சேர்ந்து விடலாம் என்று இருக்கிறேன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.