எரியும் இலங்கை: என்ன நடக்கிறது? நேரடி ரிப்போர்ட் - 1

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
எரியும் இலங்கை: என்ன நடக்கிறது? நேரடி ரிப்போர்ட் - 1

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன், இலங்கை மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டு, ஆளப்பட்டு வந்தது. அவை, கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் (Kandy, Kotte, Jaffna) ஆகியவை. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் இலங்கை, தமிழ் அரசர்களாலும், சிங்கள அரசர்களாலும் காலங்காலமாக ஆளப்பட்டு வந்துள்ளது. சில தமிழ் அரசர்கள் இலங்கை முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த வரலாறுகளும் உண்டு. எடுத்துக்காட்டு, இராஜராஜ சோழன்.

15-ம் நூற்றாண்டில் கோவாவைக் கைப்பற்றிய போர்த்துகேயர், பின்னர் இலங்கையின் கோட்டை ராஜ்யத்தையும் கைப்பற்றினர். கோவாவில் வாழ்ந்த கிறிஸ்துவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, யாழ்ப்பாண ராஜ்யத்தின் கீழ் இருந்த மன்னார் தீவு, தமக்குப் பாதுகாப்பான பிரதேசம் எனக் கருதிய போர்த்துகேயர் மன்னாரைக் கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாண ராஜ்யத்தின் மீது போர் தொடுத்து, யாழ்ப்பாண ராஜ்யத்தை 1619-ம் ஆண்டு கைப்பற்றினர்.

1658-ல் கோட்டை, யாழ்ப்பாண ராஜ்யங்களை ஒல்லாந்தர் கைப்பற்றிய போதும், கண்டியை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.

ஆங்கிலேயர்கள் 1815-ம் ஆண்டு கண்டியை ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் என்ற தமிழ் மன்னனிடமிருந்து கைப்பற்றினர். தொடர்ந்து 1833-ம் ஆண்டு இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து (இந்தியாவை ஒருங்கிணைத்தது போல்) ஆட்சி புரிந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷார் 1931-ம் ஆண்டு இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கினர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த சர் பொன். இராமநாதன் சர்வஜன வாக்குரிமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டால், சிறுபான்மைத் தமிழர்கள், பெரும்பான்மை சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் நசுக்கப்படுவார்கள் என்ற காரணத்திற்காகவே சர்.பொன். இராமநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இலங்கை ஜனத்தொகையில் 72% சிங்கள பௌத்தர்கள், 27% தமிழர்கள், முஸ்லிம்கள் உள்பட (இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ்).

சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க முற்பட்டபோது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைக்கு பூரண சுதந்திரம் வேண்டும் எனப் போராடினர்.

இடமிருந்து வலம் (1939)- பரோன் ஜெயதிலக , ஜவஹர்லால் நேரு, ஜி.சி.எஸ். கொரியா, டி.எஸ். சேனநாயக, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக, ஜோன் கொத்தலவால 
இடமிருந்து வலம் (1939)- பரோன் ஜெயதிலக , ஜவஹர்லால் நேரு, ஜி.சி.எஸ். கொரியா, டி.எஸ். சேனநாயக, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக, ஜோன் கொத்தலவால 

1931-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சட்டமன்றத்துக்கான தேர்தலைத் தமிழர்கள் புறக்கணித்தனர். இதனால் இலங்கையின் முதலாவது சட்டமன்றம் தனிச் சிங்கள மன்றமாக உருவானது.

1948-ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது தமிழர்களின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் ஏனைய இனங்களுக்கும் சமபல பிரதிநிதித்துவம் (Balance Representatives) 50:50 வேண்டுமென வாதாடினார். பொன்னம்பலத்தின் கோரிக்கையை பிரிட்டிஷார் ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை ஒற்றை அரசு - Unitary State ஆகப் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

பின் தமிழர்களின் தலைவர் செல்வநாயகம் சமஷ்டி அரசு கேட்டு அகிம்சை வழியில் போராடினார். இலங்கை ஆட்சியாளர்கள் செல்வநாயகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்தனர்.

1956 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தனிச்சிங்கள சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அப்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு எதிரே சத்தியாகிரகம் இருந்தனர். பண்டாரநாயக சிங்களக் காடையர்களை ஏவி சத்தியாகிரகம் இருந்த தமிழ் எம்.பி.க்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

காவல்துறையின் இந்தத் தாக்குதலில் பிற்காலத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் தலை பிளந்து ரத்தம் வழிந்தது. அப்போது பண்டாரநாயக தனது வாகனத்தில் நாடாளுமன்றத்துக்கு போய்க்கொண்டிருந்தார். காவல்துறை தலைவர் சிட்னி டி சொய்சா (IGP Sydney De Zoysa) ஓடிச்சென்று 'சார், தமிழ் எம்பிக்களின் தலை உடைந்து இரத்தம் வழிகிறது’ என்று சொன்னார். பண்டாரநாயக காரில் இருந்தவாறே சுங்கானை (pipe cigar) எடுத்துவிட்டு 'let them taste’ (அவர்களைச் சுவைக்க விடு)  என்று கூறி விட்டுச்சென்றார்.

அத்துடன் 1958-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்களர்களைத் தூண்டி விட்டு கொழும்பிலிருந்து தமிழர்களைத் துரத்தியடித்தார். அகதிகளாகக் கொழும்பு இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த தமிழர்களை யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு கப்பலையும் அனுப்ப மறுத்தார்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடங்கி மூன்றாம் நாள், நேரு,  கொழும்பிலிருந்த இந்தியத் தூதர் மூலம் பண்டாரநாயகவைக் கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறும் இல்லாவிட்டால் இந்தியா தலையிட வேண்டி வரும் எனவும் எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து தம்பையா என்ற தமிழனுக்கு சொந்தமான கப்பலில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த அகதிகளை யாழ்ப்பாணத்துக்கு பண்டாரநாயக அனுப்பி வைத்தார். இந்தக் கலவரம்தான் பிரபாகரனை ஆயுதம் தூக்க வைத்தது. பிரபாகரனின் குடும்பமும் கப்பலில் அகதிகளாக யாழ்ப்பாணம் வந்தனர்.

1971-ம் ஆண்டு பண்டாரநாயகவின் மனைவி சிறிமாவோ பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு மெரிட் முறையை இல்லாமல் செய்து தரப்படுத்துதல் (standardization) முறையை அமல் படுத்தினார். இதனால் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்தது.

(இடமிருந்து) ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம்,  நீலன் திருச்செல்வன்
(இடமிருந்து) ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம்,  நீலன் திருச்செல்வன்

பின்பு சக வாழ்வு வேண்டும் என தனி நாடு என்ற தீர்மானத்தை வட்டுக் கோட்டையில் செல்வா முன்வைத்து அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் ஆதரவை வழங்கினர். பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள், சத்தியசீலன் போன்றவர்கள் தலைமையில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட தீர்மானித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வரலாறு படைத்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் களப் போராட்டம் அனைவரும் அறிந்த நிகழ்வுகளே.

இலங்கையின் முதலாவது பிரதமர், கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தார். காலத்திற்குக்காலம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின்போது கிழக்கு மாகாண தமிழர்கள் அவர்களது பூர்விக நிலங்களில் இருந்து விரட்டப்பட்டனர். கந்தளாய் என்ற தமிழ் மாவட்டம் இப்போது தனிச்சிங்கள மாவட்டமாக மாறிவிட்டது.

திருகோணமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாக தமிழர்களின் ஜனத்தொகை வீழ்ச்சியடைந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், இப்போது தமிழ் எம்.பி ஒருவரைத் தேர்வு செய்வதே கடினமாக உள்ளது. தம்பலகாமம் என்ற தமிழ்க் கிராமம் இப்போது தம்பகமுவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள கிராமமாக மாறிவிட்டது.

யாழ்ப்பாணத்தையும் திருகோணமலையையும் இணைக்கும் மணலாறு என்ற கிராமம் இப்போது வெலிஓயா என சிங்கள பெயர் சூட்டப்பட்டு அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது.

முள்ளிவாய்க்கால் யுத்தம் 2009-ல் முடிந்தபின் முல்லைத்தீவிலும் சிங்களக் குடியேற்றம் இரண்டு ஆட்சியாளர்களாலும் (மகிந்த - மைத்ரி) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. திருகோணமலையில் கன்னியா என்ற இடத்தில் இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்த ஏழு வெந்நீரூற்றுகள் உள்ளன.

இங்குள்ள சிவன் கோயிலுக்கு மக்களைச் செல்லவிடாமல் தடுத்து விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதே போல் வவுனியாவில் வெடுக்கு நாறிமலை என்ற மலை மீதுள்ள சிவன் கோயிலில் புத்த பிக்குகள் புத்தருடைய விக்கிரகத்தைக் கொண்டுவந்து வைத்து காவலர்களின் உதவியுடன் தமிழர்களை (இந்துக்களை) கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். முல்லைத்தீவிலும் குருந்தூர் மலை என்ற இடத்தில் மலை மீது உள்ள சிவன் கோயிலிலும் புத்த பிக்குகள் புத்தருடைய விக்கிரகத்தைக் கொண்டுவந்து வைத்து காவலர்கள் உதவியுடன் தமிழர்களை (இந்துக்களை) கோயிலுக்குச் செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர்.

எல்லாம் முடிந்து இப்போது யாழ்ப்பாணத்திலும் மாதகல் என்ற கரையோர கிராமத்தில் உள்ள பறாளாய் முருகன் கோயிலிலும் புத்த பிக்குகள் சென்று புத்த மத அனுஷ்டானங்களைச் செய்துள்ளனர். இதனால் இந்தப் பகுதி மக்கள் இங்கேயும் சிங்கள குடியேற்றம் வந்து விடுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

இலங்கை இந்துக்கள் சைவம் மட்டுமல்ல, வைணவ வழிபாடும் உண்டு. இலங்கையில் அதிகமாக இந்துக்கள் கூடும் ஆலயங்கள் தென் கைலாயம் எனப் போற்றப்படும் திருத்தலம், வாயு பகவானால் உடைத்து வீசப்பட்ட மூன்று சிகரங்களுள் ஒன்றான மலை, அகத்தியர் தவமியற்றிய பூமி, திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தேவாரத் தலம், திருப்புகழ் பாடல் பெற்ற கோவில், ராவணன் வழிபட்டுப் பேறுபெற்ற கோவில், இலங்கையின் பெருமைக்குச் சான்றாக விளங்கும் சைவத் திருத்தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, இலங்கை திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேசுவரம் ஆலயம்.

வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னாரில் உள்ள ஒரு பழமையான திருக்கேதீசுவரம் பண்டைய தமிழ் துறைமுக நகரங்களான மாந்தை மற்றும் குதிரைமலையைக் கண்டும் காணாத வகையில், இக்கோயில் இடிபாடுகளில் கிடக்கிறது. தேவாரப் பாடல்களில் போற்றப்படும் சிவனின் பாடல் பெற்ற தலங்களில் திருக்கேதீஸ்வரமும் ஒன்று.

மேலும், லட்சுமிநாராயணர் ஆலயம், நல்லூர் கந்தசாமி கோயில், ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோயில், வற்றாப்பளை கண்ணகியம்மன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் கோயில், திருக்கேதீச்சரம், செல்வச் சந்நிதி கோயில், புதூர் நாகதம்பிரான் ஆலயம்  போன்ற கோயில்கள் பல உண்டு. இதையும் அழிக்க முயற்சிகள் நடக்கின்றன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com