உறவுக்குக் கை; உரிமைக்குக் குரல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் விஜயமும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி ஆபோட்டின் இந்திய விஜயமும் , "ஜப்பான் - இந்தியா - ஆஸ்திரேலியா' என்கிற கூட்டணி ஏற்படும் வாய்ப்பை உருவாக்கி இருப்பதால், இன்று அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் விஜயம் சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
Updated on
2 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் விஜயமும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி ஆபோட்டின் இந்திய விஜயமும் , "ஜப்பான் - இந்தியா - ஆஸ்திரேலியா' என்கிற கூட்டணி ஏற்படும் வாய்ப்பை உருவாக்கி இருப்பதால், இன்று அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் விஜயம் சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. சீனாவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை இந்தியா அமைத்துவிடாமல் தடுப்பதுதான் அதிபர் ஜீயின் அரசுமுறைப் பயணத்திற்குக் காரணம் என்பது உலக நாடுகள் அனைத்துக்குமே நன்றாகத் தெரியும். பிரதமர் மோடி, தனது முதல் அரசுமுறைப் பயணத்திற்கு ஜப்பானைத் தேர்ந்தெடுத்தபோதே, சீனாவின் இந்திய உறவில் புதியதொரு மாற்றம் ஏற்படும் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள்.

"அதிபர் ஜீயின் இந்தியப் பயணம் சீன - இந்திய உறவில் புதியதொரு அத்தியாயமாக இருக்கப் போகிறது' என்று ஒரு வராம் முன்பே சீன வெளியுறவுத் துறை இணையமைச்சர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அதிபர் ஜீயின் வருகைக்கு முன்னால், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் பெய்ஜிங்குங்குப் போய், உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள் நடத்திவிட்டு வந்திருக்கிறார். இரண்டு நாடுகளாலும் இந்த அரசுமுறைப் பயணத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.

அதிபர் ஜீயை ஆமாதாபாதில் பிரதமர் மோடி வரவேற்று தனிப்பட்ட முறையில் உபசரிக்க இருக்கிறார். சீன அதிபர் ஜீ, தில்லிக்கு வராமல் வழக்கத்துக்கு மாறாக குஜராத் மாநிலத்திற்கு முதலில் விஜயம் செய்வது புதிய மாற்றம். இந்தியாவும் சீனாவும் 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கின்றன. கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது, கலாசார பரிமாற்றங்களுக்கு வழிகோலுவது போன்றவை அல்லாமல், சீனா இந்தியாவில்

குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர் (சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய இருக்கிறது.

சீனாவின் உற்பத்தி நகரமான ஷென்செங் போல, குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு அருகிலும், மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு அருகிலும் இரண்டு பிரம்மாண்டமான தொழில் நகரங்களை சீனாவின் உதவியுடன் நியமிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வணிகப் பரிமாற்றம் 65.9 பில்லியன் டாலர்கள். அதில், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதி 51 பில்லியன் டாலர்கள். இந்தியாவிலிருந்து சீனாவுக்கு நமது ஏற்றுமதி வெறும் 15 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

இந்தியாவிலும் சீனாவில் இருப்பதுபோலத் தொழில் நகரங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலம், நாமும் சீனாவைப் போல, அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும் என்பதுதான் அரசின் திட்டம்.

இமயமலையிலுள்ள சியாச்சின் பகுதியை 1962 போரின்போது சீனா கைப்பற்றியது. அதேபோல, அருணாச்சலப் பிரதேசத்தைத் தனது எல்லைக்குட்பட்டதாகச் சீனா கோருகிறது. இந்திய சீன எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. லடாக் பகுதியில் சீனத் துருப்புக்கள் இந்தியாவுக்குள் அடாவடியாக நுழைந்து, அங்கிருக்கும் கிராமத்தவர்களை மிரட்டுவது தொடர்கிறது. சீனாவுடன் மோதலைத் தவிர்த்து நட்புறவைப் பேண முற்படும் அதே நேரத்தில், இந்தியாவின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பது என்கிற கொள்கையை நரேந்திர மோடி அரசு கடைப்பிடிக்குமானால் மட்டுமே அது பாராட்டுக்குரியது.

சீனத் தரப்பின் கோரிக்கை தைவான், திபெத் அடங்கிய "அகண்ட சீனா' அல்லது "ஒற்றைச் சீனா' என்கிற கோட்பாட்டை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருக்கக் கூடும். தலாய் லாமா தலைமையில் இந்தியாவில் "தர்மசாலா' எனுமிடத்திலிருந்து செயல்படும் போட்டி திபெத் அரசுக்கு, இந்தியா அளித்துவரும் ஆதரவையும், அங்கீகாரத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுகூட, சீனத் தரப்புக் கோரிக்கையாக இருக்கக்கூடும். பண்டித ஜவஹர்லால் நேரு, தலாய் லாமாவுக்கு அளித்த அடைக்கலத்தையும், திபெத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கு அளித்திருக்கும் ஆதரவையும், சில பில்லியன் டாலர் முதலீட்டுக்காக இந்தியா பலி கொடுப்பது ஏற்புடையதல்ல.

அதுமட்டுமல்ல. சீனா இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டை வாரிக் கொட்டப் போகிறது என்றால், அதைக் கவனமாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராணுவத்தின் உதவியால் நாடு பிடிக்கும் காலம் மாறி, பொருளாதாரச் சார்பை ஏற்படுத்தி அடிமைப்படுத்தும் உத்தி வலையில் நாம் வீழ்ந்துவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com