ஒட்டுமொத்த உலக நாடுகளையும் திகைப்பிலும், எதிர்பார்ப்பிலும், அடுத்து என்னதான் நடக்கப் போகிறது என்கிற ஆர்வத்தின் உச்சகட்டத்திலும் நிறுத்தியிருக்கிறது கிரீஸ். மனித நாகரிகத்துக்கும், பகுத்தறிவுச் சிந்தனைக்கும் வித்திட்ட சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற அறிஞர்களையும், அலெக்சாண்டர் உள்ளிட்ட மாவீரர்களையும் உலகுக்கு அளித்த கிரேக்கம் இப்போது திவால் நிலையில், ஏனைய நாடுகளின் கருணைக்காகக் காத்துக் கிடக்கும் அவலம் கொடுமையானது.
உலகின் பார்வையில் கடனாளியாக, ஏனைய ஐரோப்பிய நாடுகளின் தயவை எதிர்நோக்கும் நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டதற்கு அந்த நாட்டு மக்களும் அவர்களது வாழ்க்கைப் போக்கும்தான் காரணம். வரவுக்கு அதிகமாகக் கடன் வாங்கிச் செலவழிக்கும் போக்கு அதிகரித்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு இது. அரசியல் காரணங்களுக்காக (லாபங்களுக்காக?) நிதி நிலைமையைப் பற்றிக் கவலைப்படாமல், மக்களைத் திருப்திப்படுத்த சலுகைகளையும், மானியங்களையும் அரசு அள்ளிக் கொடுத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு இது.
1991-இல் சந்திரசேகர் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு, பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கடத்தல் தங்கத்தை விற்று இந்தியா செலுத்த வேண்டிய வட்டித் தொகையை பன்னாட்டு நிதியத்துக்குக் (ஐ.எம்.எஃப்.) கட்டாமல் இருந்திருந்தால், இன்று கிரீஸ் சந்திக்கும் அதே நிலைமையை அப்போதே இந்தியா எதிர்கொள்ள நேர்ந்திருக்கும்.
பன்னாட்டு நிதியத்துக்குச் செலுத்தி இருக்க வேண்டிய தவணைத் தொகையை கிரீஸ் அண்மையில் செலுத்தத் தவறிவிட்டது. 180 கோடி டாலர் கடன் பாக்கி வைத்ததன் மூலம் பன்னாட்டு நிதியத்தின் 71 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமாக பாக்கி வைத்த நாடும் கிரீஸ்தான். இப்படியொரு சிக்கலில் கிரீஸ் சிக்குவது இது முதல் தடவையல்ல. ஆனால், மாட்டிக் கொண்டது இப்போதுதான்.
2010, 2012ஆம் ஆண்டுகளிலும் இதேபோன்று தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலைமை ஏற்பட்டபோது, சிக்கன நடவடிக்கைகளையும், சில பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் நிலைமையைச் சமாளிக்க உதவிக்கரம் நீட்டின. இந்த முறை அவர்களும் கைவிரித்துவிட்டனர். ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கடனைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட முதல் நாடாக கிரீஸ் காட்சியளிக்கிறது.
ஐரோப்பிய யூனியனில் உள்ள வட ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனியும், பிரான்ஸும் வளமான நாடுகள். இவை இரண்டும்தான் ஐரோப்பிய யூனியனையும், யூரோவையும் வளமையானதாக வைத்திருக்கின்றன. கிரீஸ் நாட்டை இந்தப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் (அதாவது ஜெர்மனியும், பிரான்ஸும்) முன்வந்தால், ஏறத்தாழ கிரீûஸப் போலவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளும் கூடுதல் உதவிகள் கோரக் கூடும்.
ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் உள்ள அரசுகள், வசதி இல்லாத ஏனைய ஐரோப்பிய நாடுகளைக் காப்பாற்றுவதற்காகப் பண உதவி செய்வதை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை. அதேநேரத்தில், ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரீஸ் வெளியேறினால், மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஐரோப்பிய யூனியன் கலைந்து போவதற்கு அதுவே காரணமாகி விடுமோ என்கிற பயமும் ஜெர்மனிக்கும், பிரான்ஸுக்கும் இருக்கிறது.
இதற்கு முந்தைய பொருளாதார திவால் நிலையின்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் ஏற்கெனவே மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. செலவழித்தே பழக்கப்பட்டுவிட்ட கிரீஸ் நாட்டு மக்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாததால்தான் முந்தைய அரசை அகற்றிப் பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான "சைரிசா' இடதுசாரி அரசை ஆட்சியில் அமர்த்தினார்கள். சிக்கன நடவடிக்கைகளைத் தளர்த்துவதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்திருக்கும் "சைரிசா' ஆட்சியாளர்கள், மேலும் கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள்.
பணக்காரர்கள், குறிப்பாகப் பெரும் வணிகக் கட்டமைப்பு நிறுவனங்கள் மீதான வரிகளை அதிகரிப்பது, ஏற்கெனவே கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்ட ஓய்வூதியத்தை மேலும் குறைப்பது என்கிற இரண்டு நிபந்தனைகளைப் பிரதமர் ஸிப்ராஸ் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனது தர்மசங்கடத்தை பன்னாட்டு நிதியத்துக்கும், ஐரோப்பிய மத்திய வங்கிக்கும் புரிய வைக்க மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தி, சிக்கன நடவடிக்கைக்கான அவர்களது எதிர்ப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தங்களை ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற்றுவதைத் தவிர்ப்பார்கள் என்கிற நம்பிக்கையில், குறைந்தபட்ச நிபந்தனைகளுடன் புதிய கடனுதவிக்குக் காத்திருக்கிறது கிரீஸ் அரசு. வாங்கி இருக்கும் கடனை கிரீஸôல் ஒரு நாளும் திருப்பித் தர முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஐரோப்பிய யூனியனிலிருந்து கிரீஸ் தானாகவே வெளியேறினால் போதும் என்று காத்திருக்கின்றன ஜெர்மனியும், பிரான்ஸும்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, நிதர்சன உண்மை ஒன்று இருக்கிறது. வெள்ளையர்களை வெள்ளையர்கள் இதுவரை கைவிட்டதே இல்லை. அதனால், நிபந்தனைகள் கடுமையாக்கப்படலாம். இடதுசாரி அரசைத் தனியார்மயத்துக்குத் துணைபோக வைத்து, கிரீûஸ பன்னாட்டு நிதியமும், ஐரோப்பிய யூனியனும், மறைமுகமாக அமெரிக்காவும் காப்பாற்றாமல் இருக்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! பாக். ராணுவத் தளபதியுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்! - கவிதாவின் பதிவும் பிஆர்எஸ்ஸின் பதிலும்

திருச்சி மாவட்டத்தில் வாக்களிக்கத் தவறியோர் 3.13 லட்சம் போ்!

2025-ல் பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

